Published : 20 Jun 2020 06:49 PM
Last Updated : 20 Jun 2020 06:49 PM

ட்விட்டர் கணக்கை முடக்கிய சோனாக்‌ஷி சின்ஹா

மும்பை

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளார். தனது மனநலனைக் காக்க இதைச் செய்வதாக அவர் கடைசியாக ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்தனர்.

நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவும் இதிலிருந்து தப்பவில்லை. பொறுத்திருந்து பார்த்த சோனாக்‌ஷி, தற்போது தனது ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளார். "நமது மனநலனைக் காக்க முதல் படியே எதிர்மறை விஷயங்களிலிருந்து விலகியிருப்பதுதான்.

அது இந்நாட்களில் ட்விட்டரை விட வேறெங்கும் அதிகமாக இல்லை. சரி, நான் எனது கணக்கைச் செயலிழக்கச் செய்கிறேன். வருகிறேன் மக்களே" என்று கடைசியாக ஒரு ட்வீட்டைப் பகிர்ந்து சோனாக்‌ஷி முடித்துக் கொண்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னூட்டம் இடுவதற்கான வசதியை முடக்கியுள்ள சோனாக்‌ஷி, தனது இந்த ட்வீட்டின் ஸ்க்ரீன்ஷாட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "தீ பற்றி எரியட்டும். எனக்குக் கவலையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சுஷாந்தின் மரணத்தையொட்டி ஒரு சில நட்சத்திரங்கள் பாலிவுட்டை சாடியபோது, அதைக் கடுமையாக விமர்சித்திருந்த சோனாக்‌ஷி, சுஷாந்தின் மரணத்தை வைத்து சிலர் விளம்பரம் தேடுவதாகவும், பன்றிகளுடன் சண்டையிட்டால் நம் மீது தான் அழுக்கு படியும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x