Published : 19 Jun 2020 01:26 PM
Last Updated : 19 Jun 2020 01:26 PM

பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்

பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 73.

பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவனுக்கு இன்று (ஜூன் 19) காலை மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. இவர் பழம்பெரும் நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான எம்.என்.ராஜத்தின் கணவர் ஆவார்.

1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ்த் திரையுலகில் பல்வேறு பாடல்களை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். 1947-ம் ஆண்டு 'கிருஷ்ண விஜயம்' என்ற படத்தின் மூலம் நடிகராகவே திரையுலகில் அறிமுகமானார். ஆனால், 1950-ம் ஆண்டு வெளியான 'விஜயகுமாரி' படத்தின் மூலம் பாடகரானார். அதில் குமாரி கமலாவுக்காக பெண் குரலில் பாடலைப் பாடினார்.

அதற்குப் பிறகு சி.ஆர்.சுப்புராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.என்.பாண்டுரங்கன், எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடலின் மூலம் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தார்.

1948-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் 1951-ம் ஆண்டு வெளியான 'சுதர்ஸன்' படத்தில் கண்ணனாக நடித்தார். 'கல்லும் கனியாகும்', 'கண்ணில் தெரியும் கதைகள்' ஆகிய இரண்டு படங்களைத் தயாரித்துள்ளார். இதில் 'கல்லும் கனியாகும்' படத்தை பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து தயாரித்தார். இந்தப் படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியார், இளையராஜா உள்ளிட்ட 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார்.

நடிகர் நாகேஷுக்கு இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்பதால், நாகேஷுக்குப் பல பாடல்களைப் பாடியுள்ளார். எஃகோ வசதியில்லாத அக்காலத்தில் தனது குரலில் எஃகோ எஃபெக்டைக் கொடுத்தவர். மேடைகளில் ஆர்க்கெஸ்ட்ரா கச்சேரிகள் உருவானதன் முன்னோடி இவர்தான். எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ஆர்க்கெஸ்ட்ரா குழுவை உருவாக்கியவர். பாடகர் மட்டுமன்றி 'அலைகள்', 'அகல்யா' என்ற இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் ஏ.எல்.ராகவன் நடித்துள்ளார்.

ஏ.எல்.ராகவனின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய திடீர் மறைவு பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x