Published : 18 Jun 2020 12:09 PM
Last Updated : 18 Jun 2020 12:09 PM

கணவர் சிரஞ்சீவி சர்ஜா மறைவு: மேக்னா ராஜ் உருக்கமான பதிவு

கணவர் சிரஞ்சீவி சர்ஜா மறைவு குறித்து, நடிகை மேக்னா ராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜா திடீரென்று மரணம் அடைந்தார். நெஞ்சுவலியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்ட போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.

2018-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான மேக்னா ராஜை சிரஞ்சீவி சர்ஜா திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கிறார் மேக்னா ராஜ். சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் கன்னட திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"சிரு, நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்ததை வார்த்தைகளாக்கிச் சொல்ல மீண்டும் மீண்டும் முயல்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த உலகத்திலிருக்கும் அத்தனை வார்த்தைகளைச் சேர்த்தாலும் விவரிக்க முடியாது. என் நண்பர், என் காதலர், என் கூட்டாளி, என் குழந்தை, என் நம்பிக்கைக்குரியவர், என் கணவர் - இதெல்லாவற்றையும் விட மேலானவர் நீங்கள். என் ஆன்மாவின் ஒரு பகுதி நீங்கள்.

ஒவ்வொரு முறையும் நான் வாசல் கதவைப் பார்த்து, நீங்கள் உள்ளே நுழைந்து நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று சொல்வதைப் பார்க்க முடியாதபோது இனம் கண்டுகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவைத் தாக்குகிறது. ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் உங்களைத் தொட முடியாததை உணரும்போது என் இதயத்தில் எல்லாம் மூழ்கும் ஒரு உணர்வு. ஆனால், உடனடியாக நீங்கள் என்னருகில் இருப்பது போல ஒரு மாய மந்திரத்தை உணர்கிறேன். நான் சோர்வடையும் போதெல்லாம் நீங்கள் என்னைக் காக்கும் தேவதையாக என்னைச் சுற்றி இருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை அவ்வளவு காதலித்திருப்பதால்தான் உங்களால் என்னைத் தனியாக விட்டுப் போக முடியவில்லை. இல்லையா? நம் காதலின் சின்னமாக, நீங்கள் எனக்குத் தந்த விலை மதிக்க முடியாத பரிசுதான் நம் குழந்தை. அந்த இனிய அற்புதத்துக்கு நான் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன்.

உங்களை நம் குழந்தை வடிவில் மீண்டும் இந்த பூமிக்குக் கொண்டு வரும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். மீண்டும் உங்களைத் தாங்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் புன்னகையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அறையையே ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். நீங்களும் அந்தப் பக்கம் எனக்காகக் காத்திருங்கள். என் சுவாசம் இருக்கும்வரை நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள். ஐ லவ் யூ".

இவ்வாறு மேக்னா ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x