Published : 14 Jun 2020 09:00 PM
Last Updated : 14 Jun 2020 09:00 PM

சுஷாந்த் சிங் தற்கொலை: பத்திரிகையாளர்களுக்கு அனுஷ்கா சர்மா கோரிக்கை

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அனுஷ்கா சர்மா கோரிக்கை வைத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுஷாந்த் சிங் அவரது அறையில் மரணித்திருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனிடையே முன்னணி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, சுஷாந்த் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சுஷாந்த், நீங்கள் இவ்வளவு சீக்கிரம் இறந்திருக்கக் கூடாத இளமையான, திறமையானவர். உங்களுக்கிருந்த பிரச்சினைகளிலிருந்து நீங்கள் மீள உதவி செய்ய முடியாத ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து, வருத்தமடைகிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

இந்த துயரமிகு தருணத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு மீடியாவுக்கு கோரிக்கை வைக்கிறேன். அவர்களது உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவர்களைத் துக்கம் அனுசரிக்க விடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x