Published : 12 Jun 2020 02:02 PM
Last Updated : 12 Jun 2020 02:02 PM

'பெண்குயின்' தலைப்பு ஏன்? - இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் விளக்கம்

'பெண்குயின்' என்று தலைப்பிட்டதற்கான காரணம் குறித்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலருக்குமே படத்தின் தலைப்பு ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் பலருமே 'பென்குயின்' என்பது தானே சரி என நினைத்தார்கள்.

'பெண்குயின்' என்று பெயரிட்டதற்கான காரணம் குறித்து இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் கூறியிருப்பதாவது:

"பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'பெண்குயின்' என்று தலைப்பு வைத்தேன். அம்மா என்பவரை படத்தில் ஸ்பெஷலாகக் காட்டுகிறேன். வார்த்தை விளையாட்டு மாதிரிதான் தலைப்பை முடிவு செய்தேன். பெண்கள் எப்போதுமே குயின் தான். யாருமே சளைத்தவர்கள் அல்ல. இது ஒரு ஆணாதிக்க சமூகமாகவே பார்க்கிறேன். அதற்கு இடையில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறுகிறார்கள். ஆகையால் 'பெண்குயின்' என்று தலைப்பு வைத்தால் ஆண் ராஜாவுக்கு சமமாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் வைத்தேன். இந்தத் தலைப்புக்கு ஒரு பவர் இருக்கும் என்பதால்தான்."

இவ்வாறு இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x