Published : 11 Jun 2020 07:11 PM
Last Updated : 11 Jun 2020 07:11 PM

மூடப்படும் ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கம்: சென்னைவாசிகள் அதிர்ச்சி

கோப்புப் படம்

சென்னையில் மிகவும் பிரபலமான ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் முற்றிலுமாக மூடப்படுகிறது. போதிய கூட்டம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1970-களில் தொடங்கப்பட்ட திரையரங்கம் ஏவிஎம் ராஜேஸ்வரி. பெருமை வாய்ந்த ஏவிம் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் இந்த திரையரங்கத்தையும் நடத்தியது. ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அருகிலேயே வடபழனி சாலையில் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது.

கால மாற்றத்துக்கு ஏற்றவாறு பல்வேறு திரையரங்குகள் மாற்றியமைக்கப்பட்டு, டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டன. ஆனால், ஏவிஎம் திரையரங்கம் ஏசி, சீட்டுகள் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்பட்டாலும், வெளிப்புறத் தோற்றமும், தனி திரையரங்கிற்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த டிக்கெட் விலை மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனால் வடபழனி பகுதிகளில் வசிக்கும் மிடில் க்ளாஸ் குடும்பத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக ஏவிஎம் ராஜேஸ்வரி இருந்தது. திரையரங்கிற்குள் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையும் குறைவுதான். இதனிடையே, தற்போது ஏவிஎம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக ஏவிஎம் தரப்பில் விசாரித்தபோது, "உண்மைதான். ஏனென்றால் சில வருடங்களாக எதிர்பார்த்த கூட்டம் வரவே இல்லை. 20 - 30 பேர் மட்டுமே படம் பார்க்க வந்தார்கள். ஒரு படம் வெளியான அன்று நல்ல கூட்டம் இருக்கும். அடுத்த நாள் கூட்டமே இருக்காது. இதனால் கையிலிருந்து பணம் போட்டு நடத்தப்பட்டு வந்தது.

கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்குகள் எப்படிச் செயல்படும் என்ற அச்சத்தால் மூடப்பட்டதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. மார்ச் மாதம் முதலே மூடப்படுவது உறுதியாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் கரோனா அச்சுறுத்தல் எல்லாம் தொடங்கியது. பல வருடங்களாகச் செயல்பட்டு வந்த திரையரங்கம் மூடப்பட்டது எங்களுக்கே வருத்தம்தான்" என்று தெரிவித்தார்கள்.

மேலும், ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் மூடப்பட்டது தொடர்பாக ஏவிஎம் நிறுவனத்தினர் சார்பில் விரைவில் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளனர். திரையரங்கம் இருந்த இடத்தில் படப்பிடிப்பு அரங்கம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் முக்கியச் சாலையிலிருந்த பிரபல திரையரங்கம் மூடப்படுவது, சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x