Published : 07 Jun 2020 12:11 PM
Last Updated : 07 Jun 2020 12:11 PM

'ஒரு சான்ஸ் குடு' பாடல் படமாக்கப்பட்ட விதம்: இயக்குநர் கெளதம் மேனன் பகிர்வு

'ஒரு சான்ஸ் குடு' பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, வீட்டிலிருந்தபடியே 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார் இயக்குநர் கெளதம் மேனன். அந்தப் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' 2-ம் பாகத்துக்கான கதையிலிருந்து ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக இயக்கியிருந்தார். இதில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் நடித்திருந்தனர்.

தற்போது 'ஒரு சான்ஸ் குடு' என்ற பாடலை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இதையும் கரோனா காலத்திலேயே இயக்கியுள்ளார். இதில் சாந்தனு, மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர். கார்த்திக் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு நடன அசைவுகளை சதீஷும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பாடலை படமாக்கிய அனுபவம் குறித்து கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"இப்பாடலின் மையம் என்பது காதல், நட்பு, இருவருக்கும் ஏற்படும் தவறான புரிதல் ஆகியவை தான். ஒருவன் தன் நண்பனை பற்றி நல்ல விஷயங்களை ஒரு பெண்ணிடம் சொல்லப்போக, அவள் அதனை இவனை பற்றியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். அவன் மிக நகைச்சுவையான வகையில் இதனை கையாள்கிறான். இதுவே பாடலின் மையம். இப்பாடலின் முதல் விதை பொது முடக்கத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக், மதன் கார்கி ஆகியோருடன் இதனை பற்றி பொது முடக்கத்திற்கு முன்பே விவாதித்தேன்.

இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது. மொட்டை மாடி என்பது இந்த பொது முடக்க காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே எங்கள் குழுவில் பணியாற்றினர்.

இது மிகச்சாதாரணமான ஒரு நண்பர்களின் கூடலாக, திரை மீதான காதலுடன் விரும்பி உருவாக்கும் நிகழ்வாக நிகழ்ந்தது. நடிகர்கள் அனைவரும் மேக்கப்பே இல்லாமல் தாங்களே செய்து கொண்ட இயல்பான ஒப்பனையுடன் நடித்தார்கள். அவர்களின் சொந்த உடையிலிருந்து படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் உடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன் தேர்ந்தெடுத்த உடையுடனே நடித்தார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பில் அனைவரும் முகக்கவசத்துடன், சமூக இடைவெளியை கடைப்பிடித்து மிகவும் சுத்தமான முறையில் அனைத்து விதிகளையும் பின்பற்றியே படம்பிடித்தோம். நடிகர்கள் மட்டுமே கேமராவை பார்த்து நடிக்கும் போது மட்டும் முகக்கவசம் இன்றி நடித்தார்கள். பாடலின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே போல் முழுப்பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், 'ஜோஷ்வா' படத்தின் பணிகளை முடிக்கவுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன். அதனைத் தொடர்ந்து சிம்பு, கமல், சூர்யா ஆகியோர் படங்களை இயக்க பணிபுரிந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x