Published : 06 Jun 2020 04:40 PM
Last Updated : 06 Jun 2020 04:40 PM

புதிய எபிசோட்கள் எப்போது? - விஜய் தொலைக்காட்சி விளக்கம்; புதிய தொடர்கள் அறிவிப்பு

சீரியல்களின் புதிய எபிசோட்கள் எப்போது ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு சுமார் 50 நாட்களுக்கு மேல் தடைப்பட்டு இருந்தது. இதனால் சீரியல்களின் புதிய எபிசோட்கள் இல்லாமல், பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சீரியல் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி வருகின்றன.

முன்னணித் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி, அடுத்த வாரம் முதல் சீரியல்களின் புதிய எபிசோட்கள் தொடங்கும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "வரும் வாரம் முதல் விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாரதி கண்ணம்மா', 'காற்றின் மொழி', 'ஆயுத எழுத்து', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'தேன்மொழி' ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும். நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் 8-ம் தேதி முதல் 'செந்தூரப் பூவே' என்ற புதிய மெகா சீரியல் ஒளிபரப்பையும் தொடங்கவுள்ளது விஜய் டிவி. இரவு 9 மணிக்கு இந்த மெகா சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இது காதல் நிறைந்த குடும்ப சீரியலாகும். இதன் கதை, நடுத்தர வயது (45) மனைவியை இழந்த துரைசிங்கத்தைப் பற்றியது. இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன்.

அவருக்கு கயல் மற்றும் கனி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு துரைசிங்கம் மறு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. சூழ்நிலைகள் காரணமாக அவரை மறுமணம் செய்து கொள்ள அவரது தாய் வலியுறுத்துகிறார். அதன் காரணமாக துரைசிங்கம் ரோஜாவைத் திருமணம் செய்ய நேர்கிறது.

ரோஜா, துரைசிங்கத்தின் மகள்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர் ஆவர். ரோஜா - துரைசிங்கம் திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் இருவரும் நல்ல ஜோடியாக இருந்தாலும் அவர்களுக்குள் பெரும் வயது வித்தியாசம் உள்ளது. அதையும் மீறி அவர்கள் இருவரும் எவ்வாறு வாழ்வில் இணைகிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது இந்த 'செந்தூரப் பூவே' மெகா சீரியல்.

இதில் துரைசிங்கமாக நடிகர் ரஞ்சித் முதன்முதலாக சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 'பாண்டவர் பூமி', 'நேசம் புதுசு', 'பீஷ்மர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x