Last Updated : 06 Jun, 2020 02:37 PM

 

Published : 06 Jun 2020 02:37 PM
Last Updated : 06 Jun 2020 02:37 PM

'குயின்' சீஸன் 2 இன்னும் பரபரப்பாக இருக்கும்: ரம்யா கிருஷ்ணன்

'குயின்' வெப் சீரிஸின் இரண்டாவது சீஸன் இன்னும் பரபரப்பான காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

நடிகையாக இருந்து பெரிய அரசியல் தலைவியாக உயரும் ஒரு பெண்ணின் கதைதான் 'குயின்'. நடிகையும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதைதான் 'குயின்' என்று சொல்லப்பட்டது. அவரது பாணியிலேயே ரம்யா கிருஷ்ணனின் சக்தி சேஷாத்ரி கதாபாத்திரத்துக்கும் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது ஜெயலலிதாவின் கதை இல்லை என்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

"நீங்கள் வேண்டுமானால் அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். இதைத்தான் இயக்குநரும் என்னிடம் சொன்னார். இது அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் தொடர். ஜெயலலிதாவின் கதையைப் போல இருந்ததால் எனக்கு இந்தத் தொடர் மிகவும் பிடித்தது. எனக்கு அவரது துணிச்சலும், உண்மையாக ராணியைப் போல் அவர் இருந்ததும் மிகவும் பிடிக்கும்.

கெளதம் மேனன் சொன்னபடி நான் நடித்தேன். என்னை, என் இயல்பில் அவர் இருக்கச் சொன்னார். அதைத்தான் நான் செய்தேன். நான் பேசும் வசனங்கள் மிகவும் வலிமையாக, அற்புதமாக எழுதப்பட்டிருந்தன. அவை என்னை ஆச்சரியப்படுத்தின. பேட்டி எடுக்கும் காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கேள்வி - பதில்கள் எழுதப்பட்ட விதம் மிகவும் பிடித்திருந்தது.

கதைப்படி இன்னும் அந்தக் கதாபாத்திரம் முழு அரசியல்வாதி ஆகவில்லை. முதல் சீஸனில் அவர் அந்த நிலை வரை செல்கிறார். இன்னும் சீஸன் 2 படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதில் பங்கெடுக்க நான் ஆர்வமாக இருக்கிறேன். இன்னும் அதிக ஆக்‌ஷன், பரபரப்பான காட்சிகளை இந்த சீஸனில் மக்கள் எதிர்பார்க்கலாம் .

தற்போது நிலவும் கரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. கடைசியாக நான் கதாசிரியர் ரேஷ்மாவுடன் பேசியபோது, அவர் திரைக்கதையை முடித்திருந்தார். படப்பிடிப்புக்குச் செல்ல அனைத்தும் தயார். ஆனால் இந்த ஊரடங்கைப் பொறுத்துதான் உள்ளது" .

இவ்வாறு ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

'குயின்' தொடர் தொலைக்காட்சியில், ஜீ சேனலில் ஜூன் 6 முதல் ஒளிபரப்பாகிறது. ஒரு சேனல் இதை ஒளிபரப்ப முடிவு செய்கிறதென்றால் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று அர்த்தம். தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரம்யா கிருஷ்ணன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x