Published : 06 Jun 2020 12:21 PM
Last Updated : 06 Jun 2020 12:21 PM

உங்கள் மவுனம் உங்களை காப்பாற்றாது: தமன்னா

உங்கள் மவுனம் உங்களை காப்பாற்றாது என்று தனது சமூக வலைதள பதிவில் தமன்னா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவருடைய நடிப்பில் 2 தெலுங்கு படங்கள், 1 இந்திப் படம் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றும் தயாராகி வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.

தற்போது உலகளவில் அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதே போல் இந்திய அளவில் கேரளாவில் கர்ப்பமான யானை ஒன்றின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் அரசியல் கட்சியினர், தொழில்துறை பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த இரண்டு சம்பவத்தையும் சேர்த்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் தமன்னா. இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"உங்கள் மவுனம் உங்களை காப்பாற்றாது. மனிதனோ விலங்கோ ஒவ்வொரு உயிரும் முக்கியம் இல்லையா? எந்த ஒரு படைப்பையும் அழிப்பது இயற்கை விதிகளுக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதர்களாக மாறி, அன்பையும் பரிமாறி, இரக்கத்தை வெளிப்படுத்தவும் கற்றுக் கொள்ளவேண்டும்"

இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x