Published : 04 Jun 2020 09:37 PM
Last Updated : 04 Jun 2020 09:37 PM

'கே.ஜி.எஃப்' இயக்குநரின் அடுத்த படத்தை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்

'கே.ஜி.எஃப்' இயக்குநரின் அடுத்த படத்தை, அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி உறுதி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்

யாஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'கே.ஜி.எஃப்'. கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் இயக்குநர் பிரசாந்த் நீல் முன்னணி இயக்குநராக வலம் வரத் தொடங்கினார்.

தற்போது 'கே.ஜி.எஃப் 2' படத்தின் பணிகளைக் கவனித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெறவுள்ளது. 'கே.ஜி.எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு முன்னணி நாயகர்களும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இறுதியாக தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை ஜூனியர் என்.டி.ஆரை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை.

இதனிடையே, 'கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இன்று (ஜூன் 4) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் "சமூக அக்கறையுள்ள இயக்குநரும், அற்புதமான மனிதருமான பிரஷாந்த் நீல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் உங்களைக் கதிரியக்க ஆடையில் காணக் காத்திருக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வாழ்த்தின் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளது உறுதியாகிறது. இந்த ட்வீட்டை வைத்து, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகியுள்ளனர். 'கே.ஜி.எஃப் 2' பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், ஜூனியர் என்.டி.ஆர் படம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x