Published : 04 Jun 2020 12:18 PM
Last Updated : 04 Jun 2020 12:18 PM

”விநாயகரை வணங்கிக்கொண்டே யானைகளைக் கொல்கிறோம்” - கேரள யானை கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம்

கேரளாவில் பெண் யானை கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப் பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன.

இந்தச் சம்பவத்தையடுத்து உணவு சாப்பிட முடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்ற நிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை.

அந்தப் பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்தச் சம்பவத்துக்கு தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்,

ஆலியா பட்: கொடூரம்.. மிகவும் கொடூரம். நாம் தான் அவற்றுக்குக் குரலாக இருக்க வேண்டும். இது என்ன கேவலமான விளையாட்டு? மனம் மிகவும் வலிக்கிறது.

அனுஷ்கா ஷர்மா: இதற்குதான் மிருகவதைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நமக்குத் தேவை.

ஷ்ரத்தா கபூர்: எப்படி? எப்படி இது போன்ற ஒரு சம்பவம் நடக்கலாம்? அந்த மக்களுக்கு இதயம் இல்லையா? என் இதயம் நொறுங்கிப் போய்விட்டது. இதற்குக் காரணமானவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

ராஜ்குமார் ராவ்: இது மிகவும் கொடூரமான சம்பவம். கேரள முதல்வர் இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும்.

பாடகி ஹர்ஷ்தீப் கவுர்: நம்மோடு இணைந்து வாழ்வது அவ்வளவு கடினமான ஒன்றா? கர்ப்பமான ஒரு யானை மனிதர்களால் கொல்லப்பட்டிருக்கிறது. இல்லை இல்லை பேய்களால்.

பூஜா பட்: நாம் விநாயகரை வணங்கிக்கொண்டே யானைகளைக் கொல்கிறோம். அனுமாரை வணங்கிக் கொண்டே குரங்குகளை சங்கிலியால் கட்டி அதன் மூலம் மகிழ்ச்சியடைகிறோம். பல பெண் கடவுள்களை வணங்கிக்கொண்டே பெண்களைத் துன்புறுத்துகிறோம்.

வித்யுத் ஜம்வால்: இதுதான் கரோனாவுக்குப் பிந்தைய அந்தப் புதிய உலகமா? அது பெண் யானை. யாரையும் துன்புறுத்தவில்லை. எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணமே இன்றி அந்த யானை துன்பத்தை அனுபவித்தபோது மனிதர்கள் மனிதத்தை மறந்துவிட்டார்கள். இது மட்டுமே ஒரு சம்பவமல்ல, இதை நாம் தடுத்து நிறுத்தவேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x