Last Updated : 03 Jun, 2020 06:39 PM

 

Published : 03 Jun 2020 06:39 PM
Last Updated : 03 Jun 2020 06:39 PM

அமெரிக்க கறுப்பின மக்களுக்கு ஆதரவு: இந்தியப் பிரபலங்களைக் கேள்வி கேட்கும் அபய் தியோல்

தங்களது சொந்த நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி குரல் கொடுக்காமல் அமெரிக்காவில் நடக்கும் கறுப்பின மக்களுக்கு ஆதரவான இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாலிவுட் பிரபலங்களை, நடிகர் அபய் தியோல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி #blacklivesmatter என்ற ஹாஷ்டேக்கின் கீழ் உலகளவில் பல்வேறு பிரபலங்களும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கரண் ஜோஹர், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, திஷா படானி உள்ளிட்ட இந்தியப் பிரபலங்கள் ஒரு சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அபய் தியோல்.

#migrantlivesmatter (புலம்பெயர்ந்தவர்கள் உயிர் முக்கியம்) #poorlivesmatter (ஏழைகள் உயிர் முக்கியம்) #minoritylivesmatter (சிறுபான்மையினர் உயிர் முக்கியம்)'' என்ற வார்த்தைகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்த தியோல், "இப்போது இதற்கான நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன். தற்போது விழித்துக்கொண்ட இந்தியப் பிரபலங்களும், நடுத்தர வர்க்க மக்களும், ஒற்றுமையாக நின்று அமெரிக்காவில் இருக்கும் அமைப்பு ரீதியான இன வெறிக்கு எதிராக குரல் கொடுப்பதால் அது தங்களின் வீட்டுக்குப் பின்னாலும் எப்படி உருவெடுத்துள்ளது என்பதையும் அவர்கள் பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

அமெரிக்க உலகுக்கு வன்முறையை ஏற்றுமதி செய்துள்ளது. உலகை ஆபத்தான இடமாக மாற்றியுள்ளது. இது தவிர்க்க முடியாதது. கர்மா ரீதியாக அது அவர்களுக்கே திரும்பி வர வேண்டியதுதான். அவர்கள் இப்படிக் கஷ்டப்பட வேண்டியவர்கள் தான் என்று நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக நடப்பதைப் பார்த்துக் கணக்கிடுங்கள் என்கிறேன்.

உங்கள் நாட்டில் இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளைச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்கிறேன். ஏனென்றால் எல்லாம் ஒன்று போலத்தான் தெரிகிறது. அவர்கள் முன்னெடுப்பைத் தொடருங்கள். அவர்களின் நடவடிக்கைகளை அல்ல. உங்கள் சொந்த நடவடிக்கையை உருவாக்குங்கள், இயக்கத்தை உருவாக்குங்கள், உங்கள் தேசத்துக்கு சம்பந்தமான ஒன்றை உருவாக்குங்கள். அதைப் பற்றியதுதான் #blacklivesmatter என்ற இயக்கம். பரந்து யோசித்தால் நாம் - அவர்கள் என்பதே கிடையாது. நமது கிரகமே ஆபத்தில் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x