Published : 01 Jun 2020 09:52 AM
Last Updated : 01 Jun 2020 09:52 AM

சிங்கமுத்து - மனோபாலா மீது வடிவேலு புகார்

சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது வடிவேலு புகார் அளித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சுமார் 2 வருடங்களாகத் திரையுலகிருந்து விலகியே இருக்கிறார். ஆனால், இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருகிறார். இவரும், சிங்கமுத்துவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனிடையே நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சிங்கமுத்து, வடிவேலு தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் வடிவேலு.

அந்தப் புகார் மனுவில் வடிவேலு கூறியிருப்பதாவது:

"நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x