Published : 26 May 2020 08:13 AM
Last Updated : 26 May 2020 08:13 AM

தன் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று - கரண் ஜோஹர் விளக்கம் 

தன் வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரண் ஜோஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எங்கள் வீட்டில் பணிபுரியும் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை உங்களிடம் தெரியப்படுத்த விரும்புகிறேன். அறிகுறிகள் தென்பட்ட உடன் எங்கள் கட்டடத்தின் ஒரு பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மும்பை மாநகராட்சிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் எங்கள் கட்டடத்தின் மீது கிருமி நாசினி தெளித்துச் சென்றார்கள்.

குடும்ப உறுப்பினர்களும், மீதமுள்ள ஊழியர்களும் எந்த அறிகுறிகளுமின்றி நலமுடன் உள்ளோம். நேற்று காலை எங்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் எங்களை சுற்றியிருப்பவர்களின் நலனுக்காக அடுத்த 14 நாட்களுக்கு நாங்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருக்கவுள்ளோம். அதிகாரிகளால் கண்டிப்புடன் கூறப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.

தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிறந்த சிகிச்சையையும், அரவணைப்பையும் வழங்குவதையும் நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் மீண்டு வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த கடினமான சூழலில் வீட்டுக்குள் இருந்த சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த வைரஸை வெல்லலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வீட்டுக்குள் பாதுகாப்பாக இருப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x