Published : 24 May 2020 03:15 PM
Last Updated : 24 May 2020 03:15 PM

உதவித் திட்டங்கள்; சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி: மத்திய, மாநில அரசுக்கு பெப்சி வேண்டுகோள்

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெப்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகப் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களுக்கு மேலாக எதுவுமே நடைபெறவில்லை. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளுக்கும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அனுமதியளித்தது. அதில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20% பணியாளர்களைக் கொண்டே பணிபுரிய வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்தது.

இது தொடர்பாக ஸ்டெப்ஸ் அமைப்பு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தது. இதனிடையே, தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்ட நிலையில், பெப்சி அமைப்பு இன்று (மே 24) காலை பல்வேறு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கரோனா வைரஸால்‌ பாதிக்கப்பட்டுள்ள திரைப்படத் துறைக்கும்‌ இந்த இக்கட்டான நேரத்தில்‌ உதவி செய்த மாநில அரசுக்கும்‌ முதல்வருக்கும்‌, எங்கள்‌ துறை அமைச்சருக்கும் எங்கள்‌ மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌, வேலை முடக்கத்தால்‌ பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்‌ பயன்படும்‌ வகையில்‌ முதற்கட்ட மற்றும் இறுதிக்கட்டப் பணிகளைச் செய்வதற்கான தளர்வுகளை அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. அதுபோலவே நலவாரியத்தின்‌ மூலமாக முதலில்‌ 1000 ரூபாயும்‌, மறுபடியும்‌ 1000 ரூபாய்‌ கருணைத்தொகையாக அறிவித்துள்ள முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் எங்கள்‌ நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

அதுபோன்றே மத்திய அரசுக்கும்‌ சிறு கோரிக்கையாக ஒரு கோரிக்கையை முன்‌ வைக்க விரும்புகிறோம்‌. தொழில்‌ துறையாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படத்‌ துறைக்கு, திரைப்படத்‌ துறையின்‌ பாதுகாப்பற்ற தன்மை கருதி தொழில்துறைக்கு வழங்கப்படுகின்ற எந்தச் சலுகைகளுமே திரைப்படத்துறைக்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கக்‌ கூடிய லோன் போன்ற உதவிகளோ அல்லது தொழிலாளர்களுக்கு கிடைக்கக்‌ கூடிய ஒய்வூதியம்‌ போன்ற எந்தச் சலுகைகளும்‌ கிடைப்பதில்லை.

தொழில்துறை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்‌ அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகளும்‌ கூட திரைப்படத்‌ துறையினருக்குக் கிடைப்பதில்லை. இதுவும்‌ இல்லை, அதுவும்‌ இல்லை என்ற பரிதாபகரமான நிலையில்‌ உள்ளது என்பதை வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌

கரோனா லாக்டவுனால் இந்திய தேசமே முடக்கப்பட்டுள்ள நிலையில்‌ அனைத்துத் தொழில்களும்‌ மறுபடியும்‌ முழு வேகத்துடன்‌ எழுந்து நிற்க வேண்டும்‌ என்ற நல்லெண்ணத்தில்‌ 20 லட்ச கோடி ரூபாய்க்கான பல்வேறு உதவித் திட்டங்களை இந்திய தேசத்திற்கு அறிவித்துள்ளார்கள்‌. அதில்‌ திரைப்படத்‌ துறைக்கு எந்த விதமான சலுகைகளோ அல்லது நலத்திட்டத்திற்க்கான எந்தவித அறிவிப்பும்‌ இல்லை என்பது வருத்தம்‌ தரக்கூடிய விஷயமாகும்.

மத்திய அரசுக்கு எங்கள்‌ கோரிக்கையாக, எங்கள்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ துறைக்கு மற்றும்‌ இந்திய திரைப்படத்‌துறைக்கும்‌, தொழிலாளர்களுக்கும்‌ இந்த நலத்திட்ட உதவிகளில்‌ எங்களை இணைத்து எங்கள்‌ துறையும்‌ மறுபடியும்‌ உயிர்ப்பிப்பதற்கான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌ தற்போது தென்னிந்தியத் திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளன உறுப்பினர்களுக்கு 25,000 முகக்கவசங்களை வழங்கிய தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்‌ மாநிலத் தலைவரான முருகனுக்கும் மாநிலத் தலைமைக்கும்‌ எங்கள்‌ நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌ எங்களுடைய கவலைகளை அவர்களுடன்‌ பகிர்ந்துகொண்ட போது தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்ற உதவிகளை வரிசைப்படுத்தி கடிதம்‌ மூலம்‌ எங்களுக்கு அளித்தால்‌ அதை மத்திய அரசுக்கு தெரிவித்து உதவிகளைப் பெற்றுத்‌ தருவதாக உறுதி அளித்துள்ள அவர்களுக்கும்‌ எங்கள்‌ நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. .

மேலும்‌ தற்போது ஏறக்குறைய மூன்று மாதங்களாக கரோனா லாக் டவுனால் பாதிக்கப்பட்டுள்ள சம்மேளன தொழிலாளர்களுக்கு பல . நலத்திட்டங்களைச் செய்ய அனைத்துக் கலைஞர்கள்‌, தயாரிப்பாளர்கள்‌, திரைப்படத்‌ தொழிலாளர்களுக்கு எங்கள்‌ நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

பெப்சி அமைப்பு தன்னால்‌ முடிந்த வரை இந்த இரண்டு மூன்று மாதங்கள்‌ எங்களுடைய தொழிலாளர்களைப் பாதுகாத்து வருகிறோம்‌. இனியும்‌ அது மிக சிரமமான விஷயம்‌ என்பதால்‌ மத்திய மாநில அரசுகள்‌ எங்கள்‌ தொழிலாளர்களை வாழவைக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌. அதுபோன்றே சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்கலாம்‌ என மாநில அரசே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அறிவித்தமைக்கு முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும் எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. .

ஆயினும்‌ இதனுடைய சில கோரிக்கையாக அனைத்து தொழிற்சாலைகளுக்கும்‌ 50 சதவீதப் பணியாளர்களை வைத்து பணியினைத் தொடங்கலாம்‌ என சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால்‌ சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 உறுப்பினர்கள்‌ பணிபுரிய வேண்டும்‌ என ஒரு நிபந்தனை அளிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 150-லிருந்து 200 தொழிலாளர்கள்‌ பணிபுரியக்கூடிய இடத்தில்‌ 20 தொழிலாளர்களைக் கொண்டு பணிபுரிவது இயலாத காரியம்‌ ஆகும்‌.

சின்னத்திரை டிவி சீரியல்களில்‌ 10-லிருந்து 20 நடிகர் நடிகைகள்‌ இருப்பார்கள்‌. அவர்களுடன்‌ உதவியாளர்கள்‌ 10 பேர்‌ இருப்பார்கள்‌. ஆக நடிகர், நடிகைகளே 25 பேர்‌ இருப்பார்கள்‌. தொழிலாளர்களை எவ்வளவு குறைத்தாலும்‌ 35-லிருந்து 40 தொழிலாளர்கள்‌ இருப்பார்கள்‌. ஆகவே குறைந்தபட்சம்‌ 60 பேர்‌ கொண்ட குழுவுடன்‌ தொடங்கினால்‌தான் சின்னத்திரை டிவி சீரியல்‌ நடத்த முடியும்‌. தொழிற்சாலைகளுக்கு வழங்கியது போல்‌ 50 சதவீதத் தொழிலாளர்களுடன்‌ சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும்‌ எனக் கேட்டுக்‌ கொள்கிறோம்‌".

இவ்வாறு பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x