Published : 23 May 2020 04:51 PM
Last Updated : 23 May 2020 04:51 PM

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அட்டவணை ரத்து

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அட்டவணையை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மே 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ 2020-2022ம்‌ ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும்‌ செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்‌ அட்டவணை கடந்த ஏப்ரல்‌ 17ம்‌ தேதி அன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில்‌ தற்போது கரோனா வைரஸ்‌ அச்சுறுத்தல்‌ மற்றும்‌ மத்திய, மாநில அரசு அறிவித்திருக்கும்‌ ஊரடங்கால்‌ ஏற்கனவே அறிவித்திருந்த தேர்தல்கால அட்டவணையின்படி தேர்தல்‌ நடத்த முடியாத சூழ்நிலை நீடிப்பதாலும்‌, தேர்தல்‌ நடத்த கால அவகாசம்‌ வேண்டும்‌ என்று சங்க உறுப்பினர்கள்‌ சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ வழக்கு தொடர்ந்தனர்‌. அந்த வழக்கினை கடந்த 20.05.2020 அன்று விசாரித்த நீதியரசர்‌ மேற்படி சங்கத்தின்‌ தேர்தலை நடத்த மேலும்‌ 3 மாத காலம்‌ அவகாசம்‌ அளித்து செப்டம்பர்‌ 30ம்‌ தேதிக்குள்‌ ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர்‌ எம்‌.ஜெய்சந்திரன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ தேர்தல்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்‌.

மேற்படி உத்தரவின்‌ அடிப்படையில்‌ ஏற்கனவே ஏப்ரல்‌ 17-ம்‌ தேதி அறிவித்திருந்த தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பளார்கள்‌ சங்கத்தின்‌ தேர்தல்‌ அட்டவணை தற்போது இந்த அறிவிப்பின்‌ மூலம்‌ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌, 20.05.2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்‌ அடிப்படையில்‌ புதிய தேர்தல்‌ அட்டவணை உறுப்பினர்களுக்கு கடிதம்/whatsapp மூலம்‌ பின்னர்‌ அறிவிக்கப்படும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌. மத்திய. மாநில அரசு அறிவித்திருந்த ஊரடங்கால்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்க உறுப்பினர்களில்‌ பலர்‌ வெளியே போக முடியாத சூழ்நிலையில்‌ உள்ளதால்‌ தங்களது ஆண்டு சந்தாவினை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கேட்டுக்கொண்டதின்‌ பேரிலும்‌, கடந்த 20.05.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றம்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ தேர்தலை நடத்த கால அவகாசம்‌ நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளதையும்‌ கருத்தில்‌ கொண்டு மேற்கண்ட சந்தா தொகையினை செலுத்துவதற்கான கால அவகாசம்‌ வருகிற 15.06.2020 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இதன்‌ மூலம்‌ தெரிவித்து கொள்ளப்படுகிறது

குறிப்பு:

1. உறுப்பினர்கள்‌ தங்களது சந்தாத்‌ தொகையினை 15.06.2020 அன்று மாலை 6-மணிக்குள்‌ செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. 15.6.2020 அன்றே கடைசி நாள்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

2.வாக்காளர்‌ பட்டியல்‌ தொடர்பாகக் குறைகளை சமர்ப்பிக்க 15.06.2020 வரை கால அவகாசம்‌ நீடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள்‌ தங்களது குறைகளை கடிதம்‌ அல்லது (tfpcouncil@yahoo.co.in) என்ற மின்னஞ்சல்‌ மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்‌ என்றும்‌, அதனை வரும்‌ 15.06.2020 அன்று மாலை 6 மணிக்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்பதை இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இறுதி தேதிகள்‌ எந்த காரணத்தினை கொண்டும்‌ மீண்டும்‌ நீடிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x