Published : 23 May 2020 04:29 PM
Last Updated : 23 May 2020 04:29 PM

இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்: வெற்றிமாறன் வெளிப்படை

இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி அளித்துள்ளார்

கரோனா ஊரடங்கில் அனைவருமே நேரலையில் பேட்டி மற்றும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு தனியார் யூடியூப் இணையதளம் ஒன்று ஒருங்கிணைத்த கலந்துரையாடலில் பயிற்சியாளர் பாசு ஷங்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினேஷ் கார்த்திக் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே உடற்பயிற்சியாளராக பாசு ஷங்கர் இருந்து வருகிறார். இந்த கலந்துரையாடலில் தனக்குள் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

அந்தப் பகுதி:

பாசு ஷங்கர்: இளையராஜா - ரஹ்மான் இருவரும் உங்களுக்குள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்?

வெற்றிமாறன்: இளையராஜா ரஹ்மான் என்று கேட்டால், எனது தலைமுறை, நாங்கள் அனைவருமே இளையராஜா பாடல்கள் கேட்டு வளர்ந்தோம். எனவே, வேறெந்த இசையைப் பிடித்துக் கேட்டாலும் கூட, கடைசியில் இளைப்பாற, வீட்டில் இருப்பதைப் போல உணர, பாதுகாப்பாக உணர இளையராஜா பாடலைக் கேட்போம்.

தினேஷ் கார்த்திக்: என்னதான் மெக்சிகன், ஜப்பானிய உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்டாலும் கடைசியில் தயிர் சாதம் சாப்பிடும்போது ஒரு திருப்தி ஏற்படும். அப்படித்தான் இளையராஜா உணர வைக்கிறார் என நான் நினைக்கிறேன்.

வெற்றிமாறன்: இளையராஜா நீண்ட நாட்களாக துறையில் இருந்து வருகிறார். எனக்கு அவர் இசை நிறைய இதத்தை தரும். நிச்சயமற்ற, தீர்மானமில்லாத நிலையில் இருக்கும் போது அவரது இசையைக் கேட்டால் ஆறுதலாக இருக்கும். முடியாத ஒரு பிரச்சினை, முடிக்கவே முடியாது என்று நினைக்கிறோமா, இளையராஜா இசையைக் கேட்டால் போதும். அது நம்மை அந்தப் பிரச்சினையின் முடிவுக்குக் கொண்டு சென்றுவிடும்.

ரஹ்மான், பல பல முறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டுள்ளார். அதற்கு நான் அவரைப் போற்றுகிறேன். அவர் இசையமைக்க ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. அன்றிலிருந்து, தமிழில் இதுவரை அவரது இடத்தை யாருமே நெருங்க முடியவில்லை. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை இசையில் தன்னைத் தானே புதிதாக மாற்றிக் கொள்கிறார். என்ன சொன்னாலும் ஆஸ்கர் என்பது எல்லோருடைய கனவு. ஆஸ்கர் வென்ற பின் நமது சந்தை என்பது பெரிதாக விரிந்துவிடும். நம்மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகும்.

ரஹ்மான் ஆஸ்கர் வரை சென்று திரும்பி, மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறார். அங்கிருந்து அப்படியே மேலே மேலே என்று செல்ல அவர் முயலவில்லை. அவரது வேரை அவர் மறக்கவில்லை. அதில் தீர்மானமாக இருக்கிறார். எங்குச் சென்றாலும் மீண்டும் தனது வேருக்குத் திரும்புகிறார். தன்னை புதுப்பித்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கட்டமைத்து புதிய உச்சத்தைத் தொடுகிறார். அவரது இந்த குணத்தை நான் பார்த்து வியக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x