ஆகஸ்ட் முதல் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு

ஆகஸ்ட் முதல் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு

Published on

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் ‘நானும் ரெளடிதான்’. 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்தை இயக்க ஒப்பந்தமானார் விக்னேஷ் சிவன். அந்தப் படம் திட்டமிட்டப்படி தொடங்கப்படவில்லை. இதனால் மீண்டும் விஜய் சேதுபதியை இயக்க முடிவு செய்தார்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்று பெயரிடப்பட்ட புதிய படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்க விக்னேஷ் சிவன் இயக்க அறிவிக்கப்பட்டது. லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராக இருந்த போது தான், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இதன் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக லலித் குமார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in