Published : 22 May 2020 02:44 PM
Last Updated : 22 May 2020 02:44 PM

இறுதிக்கட்டப் பணிகளில் 'கே.ஜி.எஃப் 2' மும்முரம்

இறுதிக்கட்டப் பணிகளில் 'கே.ஜி.எஃப் 2' படக்குழு தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. திட்டமிட்டபடி அக்டோபர் 23-ம் தேதி வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் 'கே.ஜி.எஃப்' . யாஷ் நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்தப் படத்தின் கதை இன்னும் முடியவில்லை.

2-ம் பாகம் தயாரிப்பில் இருக்கிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் யாஷுடன் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதே தேதியில் வெளியீடு சாத்தியமா என்பது விரைவில் தெரியவரும்.

இதற்கிடையே இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு என்று விசாரித்தபோது, 25 நாட்கள் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. அதில் 2 சண்டைக் காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. அதில் சஞ்சய் தத் இடம்பெறும் சண்டைக்காட்சியும் ஒன்று.

இந்த சண்டைக் காட்சிகள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துக் காட்சிகளும் பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 23-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு தீவிரமாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x