Last Updated : 21 May, 2020 06:46 PM

 

Published : 21 May 2020 06:46 PM
Last Updated : 21 May 2020 06:46 PM

ரஜினி - கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி: சுவாரசியப் பின்னணியுடன் புதிய தகவல்கள்

கமல் தயாரிப்பில் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதன் பின்னணி குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ராஜபார்வை' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார் கமல். ராஜ்கமல் நிறுவனம் என்று தனது தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெயரிட்டார். அதற்குப் பிறகு 'விக்ரம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'தேவர் மகன்', 'ஹே ராம்', 'விருமாண்டி', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார் கமல்.

கமலின் தயாரிப்பு மற்றும் இணை தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 45 படங்களைக் கடந்துவிட்டது ராஜ்கமல் நிறுவனம். தனது தயாரிப்பு நிறுவனத்தின் 48-வது படமாக 'தலைவன் இருக்கின்றான்' படத்தை உருவாக்கவுள்ளார் கமல். 49-வது படமாக ஒரு சிறு பட்ஜெட் படத்தை விரைவில் அறிவிக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து 50-வது படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளது ராஜ்கமல் நிறுவனம்.

என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பாகவே தனது நிறுவனத்தின் 50-வது தயாரிப்பை பிரம்மாண்டமாகத் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் கமல். அப்போது உடனடியாக ரஜினியிடம் பேசி, தனது நிறுவனத்தின் 50-வது தயாரிப்பில் நடிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு ரஜினியும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போதே கமல் தயாரிப்பில் ரஜினி என்பது முடிவாகிவிட்டது.

இந்தக் கூட்டணியில் லோகேஷ் கனகராஜ் இணைந்தது இன்னொரு சுவாரசியம். லோகேஷ் கனகராஜ் தீவிரமான கமல் ரசிகர். 'கைதி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின் போதே, கமலைச் சந்தித்து கதையைக் கூறச் சென்றுள்ளார். அப்போது அவரோ 'மாநகரம்' படம் தொடர்பாகப் பேசிவிட்டு, "இப்போதைக்கு தொடர்ச்சியாக படங்கள் பண்ணிட்டு இருக்கேன். நீங்கள் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு கண்டிப்பாக படம் பண்ணுங்கள்" என்று கமல் உத்திரவாதம் கொடுத்து அனுப்பிவிட்டார்.

'கைதி' வெளியாகி மிகப்பெரிய ஹிட். 'மாஸ்டர்' படத்துக்காக டெல்லி படப்பிடிப்பில் இருக்கும்போது, லோகேஷ் கனகராஜை தொலைபேசி வாயிலாக பேசிப் பாராட்டியுள்ளார் ரஜினி. உடனே சந்தோஷமடைந்து சென்னை வந்தவுடன் ரஜினியைச் சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். அப்போது எனக்கு ஏதாவது கதை வைத்துள்ளீர்களா என்று ரஜினி கேட்டவுடன், அவரோ தன்னிடம் இருந்த கதைகள் குறித்துப் பேசியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக கமலிடம் சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். உடனே கமலோ எனது 50-வது தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ளார். அந்தப் படத்தை நீங்களே இயக்குங்கள் என்ற சந்தோஷச் செய்தியைச் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினி - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு மூன்று முறை நடந்துள்ளது. ஆகையால், ரஜினி - கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

50-வது தயாரிப்பை அறிவிப்பதற்கு முன்பாக, 2 படங்களைத் தயாரிக்கவுள்ளார் கமல். அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து ரஜினியின் கால்ஷீட் ராஜ்கமல் நிறுவனத்துக்குத்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

'தில்லு முல்லு' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினி - கமல் இணைந்து நடித்திருப்பார்கள். தற்போது உருவாகவுள்ள இந்தக் கூட்டணி படத்தில் கூட ரஜினியுடன் கமல் ஒருசில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x