Published : 20 May 2020 12:15 PM
Last Updated : 20 May 2020 12:15 PM

இறுதிக்கட்டப் பணிகளில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படக்குழு மும்முரம்

இறுதிக்கட்டப் பணிகளில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படக்குழு மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனி, ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று, இறுதிக்கட்டத்தை எட்டியது. ஆனால், கரோனா ஊரடங்கினால் பணிகள் தடைப்பட்டன. தற்போது தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, மும்முரமாக பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

முதல் நபராக விஜய் சேதுபதி தனது காட்சிகளுக்காக டப்பிங் பேசி வருகிறார். அவரது பகுதிகள் முடிவடைந்ததும் படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்கும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. அதையும் முடித்துவிட்டால், ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும்.

தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும், இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் தொடங்க 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினையைப் பேசியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x