Published : 18 May 2020 03:46 PM
Last Updated : 18 May 2020 03:46 PM

600 கோடி ரூபாய் முதலீடு முடக்கம்: படப்பிடிப்புக்கு அனுமதிக் கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை

விரைவில் படப்பிடிப்பு தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரி செய்வதற்கு முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்ததைப் போல, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது தமிழக அரசு. இதனைத் தொடர்ந்து 'மாஸ்டர்', 'இந்தியன் 2' உள்ளிட்ட முன்னணி படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே படப்பிடிப்புகளும் தொடங்குவதற்கு அனுமதிக் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து சில தயாரிப்பாளர்கள் பேசியுள்ளனர். அவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் கொண்ட மனு ஒன்றையும் அமைச்சரிடம் வழங்கியுள்ளனர். தயாரிப்பாளர் டி.சிவா, ஜே.எஸ்.ஜே, ஆர்.கே.சுரேஷ், சுரேஷ் காமாட்சி, மனோபாலா, தேனப்பன், தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தயாரிப்பாளர்கள் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை.

தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடுத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்"

இவ்வாறு தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x