Published : 16 May 2020 12:35 PM
Last Updated : 16 May 2020 12:35 PM

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா - அர்ஜுன்

பா.விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

'ஜிப்ஸி' படத்தைத் தொடர்ந்து, தமிழில் 'களத்தில் சந்திப்போம்' மற்றும் இந்தியில் '83' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஜீவா. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்.

இறுதியாக பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் பா.விஜய் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே, அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'ஸ்ட்ராபெரி' மற்றும் 'ஆருத்ரா' ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குகிறார் பா.விஜய்.

சு.ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'மேதாவி' எனத் தலைப்பிட்டுள்ளனர். அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்திலும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். ஹாரர் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவுள்ளது.

சாரா, 'கைதி' தினா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகிணி ஆகியோரும் இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். யுவன் இசையமைக்க, தீபா குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். எடிட்டிங் பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கவுள்ளார்.

நேற்று (மே 15) தயாரிப்பாளர் சு.ராஜாவின் பிறந்த நாள் என்பதால், 'மேதாவி' படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், பெப்சி தலைவர்களுக்காக 5 கிலோ அடங்கிய 25 ஆயிரம் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன. அதாவது மொத்தமாக 1,25,000 கிலோ அரிசி கொடுக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x