Published : 15 May 2020 04:40 PM
Last Updated : 15 May 2020 04:40 PM

என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ: ஜி.வி.பிரகாஷ் உருக்கம்

என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ என்று '4G' இயக்குநர் மறைவு தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து '4G' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வந்தன.

ஊரடங்கு காரணமாக மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரில் இருந்தார் அருண். இன்று (15.05.20) காலை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அருண் பிரசாத் மறைவு தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"காலையில் தொலைபேசியில் வெங்கட் பக்கர் இறந்துவிட்டார் என்ற தகவலைச் சொன்னார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த வேலையும் ஓடவில்லை. இன்று இந்த வேலைகள் எல்லாம் என்று திட்டமிட்டு இருந்த அனைத்துமே மறந்துவிட்டன. எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர், சகோதரர் என்று வெங்கட் பக்கரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

நான் பணிபுரிந்த இயக்குநர்களோடு மிகவும் நட்பாகிவிடுவேன். அது என்னோடு பணிபுரிந்த அனைவருக்குமே தெரியும். இந்த மறைவு என்பது என்னால் இப்போது வரை நம்பமுடியவில்லை. தமிழ்த் திரையுலகில் விரைவில் நல்ல இயக்குநர் என்ற பெயருடன் அறிமுகமாகி இருக்க வேண்டியவர் சென்றுவிட்டார்.

'4G' கதையை அவர் என்னிடம் சொல்லும்போது, உடனே ஒப்புக்கொண்டேன். வித்தியாசமான களம் என்றிருந்தாலும், அந்தக் களத்தில் அவருடைய காட்சியமைப்புகள் மற்றும் அந்தக் கதையில் அவருக்கு இருந்த நம்பிக்கை. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவருடன் பேசியது, பழகியது எல்லாம் மறக்கவே முடியாது. வயது சிறியது என்றாலும், மூளை பெரியது. கதையைச் சொன்ன நாட்களை விட, மிகக் குறைவான நாட்களிலேயே முடித்துக் கொடுத்துவிட்டார். அந்தக் கதையோடு அவர் அந்த அளவுக்கு ஊறியிருந்தார்.

தமிழ்த் திரையுலகில் எப்படியாவது ஒரு இயக்குநராக ஜொலித்துவிட வேண்டும் என்று நினைத்த ஒரு இயக்குநர் இன்று காலமாகிவிட்டார். அவர் இந்த உலகை விட்டு மறந்தாலும், அவருடைய இயக்கத் திறமையை '4G' படம் மூலம் நாம் உணர்வோம். கண்டிப்பாக அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு என இருக்கும்போது வெங்கட் பக்கர் பற்றி இன்னும் நிறைய சொல்வேன்.

கண்டிப்பாக என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ..."

இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x