Published : 15 May 2020 03:08 PM
Last Updated : 15 May 2020 03:08 PM

நேர்மறையானவர்; கடின உழைப்பாளி: '4G' பட இயக்குநர் மறைவுக்கு ஷங்கர் இரங்கல்

நேர்மறையானவர். கடின உழைப்பாளி என்று '4G' பட இயக்குநர் மறைவுக்கு ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரிடம் 'ஐ' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து '4G' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்துக்காக தனது பெயரை வெங்கட் பக்கர் என்று மாற்றியிருந்தார். சி.வி.குமார் தயாரிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ் இசை என இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வந்தன.

ஊரடங்கின் காரணமாக மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரில் இருந்தார் அருண். இன்று (15.05.20) காலை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது உதவி இயக்குநர் மறைவு தொடர்பாக இயக்குநர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னுடைய முன்னாள் உதவியாளரும் இளம் இயக்குநருமான அருணின் திடீர் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர். கடின உழைப்பாளி. உங்களுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ஷங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x