Published : 14 May 2020 07:28 PM
Last Updated : 14 May 2020 07:28 PM

என் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெறவில்லை: சல்மான் கான்

சல்மான் கான் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எந்த நடிகர் நடிகையர் தேர்வும் நடைபெறவில்லை என நடிகர் சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம், அவர்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வு செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வர ஆரம்பித்தன. இதுகுறித்து சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை பகிர்ந்துள்ளார்.

"நானோ, சல்மான் கான் ஃபிலிம்ஸ் சார்பாகவோ யாரும் எந்த விதமான நடிகர் தேவையும் நடத்தவில்லை. எங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்ய யாரையும் நியமிக்கவில்லை. அப்படியான புரளிகளைத் தாங்கி வரும் எந்த விதமான மின்னஞ்சல்களையும், செய்திகளையும் நம்பாதீர்கள். சல்மான் கான் ஃபிலிம்ஸ் பெயரையோ, என் பெயரையோ அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது ரசிகர்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா நெருக்கடி காலத்தில் சல்மான் கான் பணம், பொருள் என நிறைய உதவிகளைச் செய்து வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், தனது பண்ணை வீட்டில் ஊரடங்கு நாட்களைக் கழித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x