Published : 14 May 2020 02:00 PM
Last Updated : 14 May 2020 02:00 PM

விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது மட்டும் நியாயம் ஆகிவிடாது: எம்.எஸ்.பாஸ்கர்

விழுப்புரம் சிறுமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது மட்டும் நியாயம் ஆகிவிடாது என்று எம்.எஸ்.பாஸ்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு முன்பாகவே தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சிறுமியின் மரணம் தொடர்பாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

"பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்? ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா?

அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப் பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு? முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவி சிறுமிக்கும், மகளைப் பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ , கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது"

இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x