Published : 11 May 2020 01:32 PM
Last Updated : 11 May 2020 01:32 PM

6 நிமிடத்துக்கு ரூ.6 கோடி: 'புஷ்பா'வில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி

'புஷ்பா' படத்தில் வரும் 6 நிமிட சண்டைக்காட்சிக்காக 6 கோடி ரூபாயைச் செலவு செய்யவுள்ளது படக்குழு.

'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் அல்லு அர்ஜுன். இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளிலும் தயாராகிறது.

தற்போது கரோனா அச்சுறுத்தலால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும், இதில் விஜய் சேதுபதியும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக வெளிநாட்டிலிருந்து இயக்குநர்கள் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் 6 நிமிடத்துக்கு ஒரு சண்டைக் காட்சி இருக்கிறதாம். இதற்காக மட்டும் சுமார் ரூ.6 கோடி ரூபாயை செலவழிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. பல்வேறு சண்டைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்தக் காட்சியில் நடிக்கவுள்ளார்கள். இதற்கான பிரம்மாண்ட திட்டமிடல் தயாராகி வருகிறது.

இந்தக் காட்சியை எந்தவொரு வெளிநாட்டுக் கலைஞரும் இல்லாமல் முழுக்க இந்தியக் கலைஞர்களை வைத்தே படமாக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாராகும் படத்தில் முழுக்க இந்தியாவிலுள்ள கலைஞர்களையே உபயோகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x