Published : 11 May 2020 10:46 AM
Last Updated : 11 May 2020 10:46 AM

தனியார் சேனலுக்கு கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் எச்சரிக்கை 

'கே.ஜி.எஃப்' திரைப்படத்தை அனுமதியின்றி ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'கே.ஜி.எஃப்'. கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக ராக்கி பாய் என்ற பெயர் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் 'கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று 'கே.ஜி.எஃப்' திரைப்படத்தை அனுமதியின்றி தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில் 'கே.ஜி.எஃப்' தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்த்திக் கவுடா அந்த சேனலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘எவ்ரி’ என்ற பெயர் கொண்ட ஒரு சேனல் 'கே.ஜி.எஃப்' திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பி வருகிறது. அவர்களது இந்த நடவடிக்கையை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொண்டு அவர்கள் மீது வழக்குத் தொடுக்க இருக்கிறோம்.

சாட்டிலைட் உரிமைகள் கிட்டத்தட்ட முடிவாகும் தருணத்தில் ஒரு கேபிள் சேனல் இப்படிச் செய்கிறது. எங்களிடம் தகுந்த ஆதாரங்களாக ஸ்க்ரீன்ஷாட்களும், வீடியோக்களும் உள்ளன''.

இவ்வாறு கார்த்திக் கவுடா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x