Published : 09 May 2020 04:31 PM
Last Updated : 09 May 2020 04:31 PM

கரோனா பாதிப்பு; ஒரு படத்துக்கு 1 ரூபாய் சம்பளம்: ஹார்த்தி அதிரடி

அடுத்த ஓராண்டுக்கு நடிக்கும் படங்களில் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெறவுள்ளதாக நடிகை ஹார்த்தி தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், அருள்தாஸ் மற்றும் இயக்குநர் ஹரி உள்ளிட்டோர் சம்பளக் குறைப்பு தொடர்பாக அறிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக ஹார்த்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"கடினமான இந்தக் கரோனா காலத்தை அனைவரும் கடந்து வந்துகொண்டே இருக்கிறோம். கூடிய விரைவில் இந்த நிலை மாறும் என நம்புகிறேன். சினிமா என்பது பொதுமக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு. ஆனால், இந்த சினிமாவையே நம்பியிருக்கும் பல்லாயிரம் குடும்பங்களுக்கு, சினிமாதான் வாழ்வாதாரமே. இந்த சினிமா நல்லாயிருக்க வேண்டும் என்றுதான் நடிகர் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், உதயா மற்றும் இயக்குநர் ஹரி சார் வரைக்கும் அவர்களுடைய சம்பளத்தை 25% தொடங்கி 40% வரை குறைத்துள்ளனர். ரொம்ப நல்ல விஷயம். மிக்க நன்றி.

நான் பெரிய பிள்ளையாருக்கு முன்பு சின்ன எலிதான். என் மனதுக்குப் பட்டதை அனைவரது ஆசீர்வாதத்துடன் செய்யலாம் என்று இருக்கிறேன். என்னவென்றால், அடுத்த ஒரு வருடத்துக்கு நான் நடிக்கப் போகும் ஒவ்வொரு படத்திலிருந்தும் என் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே பெறவுள்ளேன். இதற்கு ஒரு காரணம் உள்ளது. என்னவென்றால், சினிமா எப்படியிருக்கும் என யாருக்குமே தெரியாது.

இந்த சினிமாவை நம்பி முதலீடு போடும் அனைத்து தயாரிப்பாளர்களுமே நம்முடைய முதலாளி. அவர்கள் நன்றாக இருந்தால் மட்டுமே, நாம் அனைவரும் நன்றாக இருப்போம். ஹார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும், 15 நாட்கள் கால்ஷீட் வேண்டும். ஆனால் அவருடைய சம்பளம் பெரியதாச்சே என்று எந்தவொரு இயக்குநரும் யோசிக்கவே வேண்டாம். ஏனென்றால் நான் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்கவுள்ளேன். எந்த கண்டிஷனும் கிடையவே கிடையாது.

ஒரே ஒரு சின்ன வேண்டுகோள் உள்ளது. நான் நடிக்கும் படங்களில் இயக்குநர் ஒரு காட்சியைத் திட்டமிடலாம். அந்தக் காட்சிக்கு 10 துணை நடிகர்கள் அல்லது நாடக நடிகர்கள் தேவைப்படும் பட்சத்தில், அதில் கூடுதலாக 10 நடிகர்களுக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும். ஹார்த்தி நடித்தால் இவ்வளவு சம்பளம் என்று ஒரு பட்ஜெட் வைத்திருப்பீர்கள். நான் வாங்கப்போவது ஒரு ரூபாய் தானே. அந்த மீதிப் பணத்தில் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுத்தீர்கள் என்றால் ரொம்பவே சந்தோஷம்.

ஏனென்றால், நமது கலைஞர்கள் அரிசி, பருப்பு கிடைக்குது, சாப்பிட்டுவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பவர்களே கிடையாது. அவர்கள் தினமும் உழைத்துச் சம்பாதித்துக் கிடைக்கும் பணத்தில் வயிற்றுப் பசியை ஆற்றிக் கொள்வார்கள். தன்மானத்துடன் வாழ்வார்கள். அதுமட்டுமன்றி, நீங்கள் திட்டமிடும் காட்சியும் பிரம்மாண்டமாக மாறும். இதன் மொத்தப் புண்ணியமும் நமது முதலாளிகளையே சேரும். இது தான் திட்டமே".

இவ்வாறு ஹார்த்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x