Published : 08 May 2020 08:50 PM
Last Updated : 08 May 2020 08:50 PM

சந்தான பாரதி உடனான நட்பு: கமல் பகிர்ந்த சுவாரசிய நிகழ்வு

சந்தான பாரதி உடனான நட்பு குறித்து கமல் ஒரு சுவாரசிய நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலைக் கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் தனக்கும் சந்தான பாரதிக்கும் இடையேயான நட்பு குறித்து ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் கமல்.

அந்தப் பகுதி:

அபிஷேக்: உங்கள் நண்பர்கள், நட்பு வட்டத்தைப் பற்றி?

கமல்: நிறைய பேர் இருந்திருக்கின்றனர். ஆர்சி சக்தி அண்ணன் என்னைப் பற்றி என் எதிரிலேயே பேசும்போது அவரை அடித்து அவர் வாயை பொத்த வேண்டும் என்று தோன்றும். அவ்வளவு புகழ்வார். நான் இல்லாதபோது இன்னும் அதிகமாகப் புகழ்வார். அவர் போல நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் என் சகோதரர்கள் போலத்தான். அவர்களின் பிள்ளைகள் என்னை சித்தப்பா என்று தான் அழைப்பார்கள்.

சந்தானபாரதி பள்ளியில் படித்த காலத்திலேயே நட்பு. சில நகைச்சுவையான சம்பவங்களும் நடித்திருக்கிறது. நான் என் திருமண பிரிவுக்குப் பிறகு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ சந்தான பாரதியிடம், ''கமலைப் பார்த்துக் கொள்ளுங்கள், பேச்செல்லாம் சரியில்லை, எதாவது செய்து கொள்ளப் போகிறார்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாம் என் வீட்டில், அலுவல் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு கோப்பையில் மது வைத்துக் கொண்டு தனியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென பின் கதவைத் உடைப்பது போல திறந்து கொண்டு வந்தார் சந்தான பாரதி.

என்ன என்று கேட்டேன், ''என்ன பண்ற?'' என்றார் உறுமிக் கொண்டே.

''டேய் என்னடா பைத்தியக்காரன் மாதிரி, படிச்சிட்டு இருக்கேன்' என்றேன்

''ம், அது என்ன பக்கத்துல?'' என்று பக்கத்திலிருக்கும் மதுவைப் பார்த்துக் கேட்டார்.

''அது ட்ரிங்''

''ம்ம்.. நான் குடிக்கட்டுமா?''

''சரி வா, இன்னொரு க்ளாஸை எடு'' என்று சொன்னேன்

''அது வேணும் எனக்கு'' என்றார் என் க்ளாஸைப் பார்த்து

''சரி எடுத்துக்கோ'' என்றே

''குடிச்சிருவேன், குடிச்சிருவேன்'' என்று சொல்லி குடித்தார்.

நான் இன்னொரு க்ளாஸை எடுத்து, என்னடா ஆச்சு என்றேன். இல்லை நீ தற்கொலை பண்ணிக்க போறியோன்னு நினைச்சிட்டேன் என்று சொல்லி கண்கலங்கிவிட்டார். அதெல்லாம் செய்து கொள்ள மாட்டேன், கவலைப்படாதே என்றேன். சினிமாவில் வரும் காட்சி போல இதெல்லாம் உண்மையான அன்பின் பிரதிபலிப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x