Published : 07 May 2020 10:15 PM
Last Updated : 07 May 2020 10:15 PM

தெலுங்கு திரையுலகினரைப் போல தமிழ்த் திரையுலகிலும் ஒற்றுமை: ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்

தெலுங்கு திரையுலகினரைப் போல தமிழ்த் திரையுலகிலும் ஒற்றுமை வேண்டும் என்று ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா நிவாரணத்துக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் நிவாரண உதவி வழங்கினார்கள். விஜய் தேவரகொண்டா தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் விரும்புபவர்கள் உதவலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த முயற்சியை தனியார் இணையதளம் ஒன்று கடுமையாக விமர்சித்தது. அவருடைய படங்களின் தோல்வியால் அவரிடம் பணமில்லை என்பதால் இப்படிச் செய்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டது. இதனை #KillFakeNews என்ற ஹேஷ்டேக் ஒன்றைத் தொடங்கி விஜய் தேவரகொண்டா கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹரிஷ் கல்யாண் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"சகோதரர் விஜய் தேவரகொண்டாவின் தாரள மனதுக்கும், மக்களுக்கு உதவியதற்கு பாராட்டுகள். கண்டிப்பாக இதை நான் எதிர்காலத்தில் பின்பற்றுவேன்.

மேலும் போலிச்செய்திகளையும், கிசுகிசு இணையதளங்களையும் எதிர்த்து சிரஞ்சீவி அவர்கள், நாகார்ஜுனா அவர்கள், மகேஷ் பாபு அவர்கள், மேலும் பல நடிகர்கள் தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த தெலுங்குத் திரையுலகமே குரல் கொடுத்திருக்கிறது. இது அவர்களின் உறுதியான ஒற்றுமையைக் காட்டுகிறது.

நாமும் (தமிழ் திரையுலகம்) இன்னும் கொஞ்சம் ஒற்றுமையாக, பிரச்சினைகளை எதிர்கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து உதவி செய்து கொண்டால், கண்டிப்பாக நம் வழியே வரும் தடைகளை எதிர்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஊரடங்குக்குப் பிறகு வரும் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும். இது நமது துறைக்குப் பெரிய ஊகத்தையும், நமது துறையிலிருப்பவர்கள் தொடர்ந்து பிழைக்கவும் உதவும்"

இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x