Published : 05 May 2020 02:08 PM
Last Updated : 05 May 2020 02:08 PM

உணவு அளித்துவிட்டேன்; போக்குவரத்து உதவுங்களேன்: தமிழக முதல்வருக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

உணவு அளித்துவிட்டேன். போக்குவரத்துக்கு உதவுங்கள் என்று தமிழக முதல்வருக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் தினசரித் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் தமிழ்த் திரையுலகில் அதிகப்படியான நிவாரணத் தொகையை லாரன்ஸ் அறிவித்தார். அதுமட்டுமன்றி, பல்வேறு வகையில் உதவிகளும் செய்து வருகிறார். தற்போது தனது சமூக வலைதளப் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என் அன்பான வேண்டுகோள்.

நான் கரோனா நிவாரண நிதிக்காக உதவி செய்து கொண்டிருப்பதால், 20 பேர் இருக்கும் ஒரு கூட்டம் எனது வீட்டுக்கு அருகே வந்தது. இப்போதுள்ள சமூக விலகல் சூழலால் நான் அவர்களை நேரடியாக சந்தித்துப் பேச முடியவில்லை. ஆனால் அவர்கள் எனக்கு ஒரு வீடியோ அனுப்பினர். அந்த வீடியோவை முதல்வரிடம் சேர்க்கும்படி என்னிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அவர்கள் ராஜமுந்திரி, விஜயவாடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. உணவு, இருப்பிடம் இல்லாமல் இங்கு மாட்டிக் கொண்டுள்ளனர். வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். நீண்ட நாட்களாக தங்களின் குடும்பம், குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்கின்றனர். அவர்களுக்கு 15 நாட்களுக்குத் தேவையான உணவை நான் தந்துள்ளேன். அவர்களின் போக்குவரத்துக்கு அரசாங்கத்தைக் கோருகிறேன்.

நீங்கள் இதற்கு முன் பலருக்கு உதவி செய்துள்ளதைப் பார்த்து, செய்தி ஊடகங்கள் மூலமாக இந்தத் தகவலை உங்களுக்கு அனுப்புகிறேன். இது உங்களிடம் வந்து சேர்ந்த பிறகு கண்டிப்பாக நீங்கள் நடவடிக்கை எடுத்து வேண்டியதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இது எனது அன்பான வேண்டுகோள். அவர்களுடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். அவர்கள் அனுப்பிய வீடியோவையும் உங்களிடம் பகிர்கிறேன்"

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x