Published : 05 May 2020 11:43 AM
Last Updated : 05 May 2020 11:43 AM

என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? - போலிச் செய்தி வெளியிட்ட இணையதளத்தைச் சாடிய விஜய் தேவரகொண்டா

கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் விரும்புபவர்கள் உதவலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பை அவர் வெளியிட்ட ஓரிரு தினங்களிலேயே ஏறக்குறைய ரூ.70 லட்சம் நன்கொடை அவரது அறக்கட்டளைக்கு வந்து சேர்ந்தது. தங்களுக்கு உதவி தேவை என்று ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. இதனைக் கருத்தில் கொண்டு புதிதாக விண்ணப்பங்கள் வருவதை நிறுத்திவிட்டு ஏற்கெனவே வந்த விண்ணப்பங்களுக்கான உதவிகளை தேவரகொண்டா அறக்கட்டளை நிர்வாகம் வழங்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில் தனியார் இணையதளம் ஒன்று விஜய் தேவரகொண்டா பற்றியும் அவரது அறக்கட்டளை பற்றியும் எதிர்மறையான கட்டுரைகளை வெளியிட்டது. அந்தக் கட்டுரைகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தன.

இதனால் கோபமடைந்த விஜய் தேவரகொண்டா அந்த இணையதளத்தைச் சாடும் விதமாக தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

''என்னுடைய நன்கொடைகளைப் பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? இது உழைத்துச் சம்பாதித்த பணம். என்னுடைய விருப்பத்தின் பேரில் அவற்றை நான் வழங்குகிறேன். எங்களுடைய மற்றும் திரைத்துறையின் விளம்பரங்களால்தான் உங்கள் இணையதளங்கள் வாழ்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு நான் நேர்காணல் தர மறுத்ததால் இப்படி எதிர்மறையாக எழுதி வருகிறீர்கள்.

மக்கள் யாரும் இது போன்ற போலிகளை நம்பாமல் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் நேர்மையான ஊடகங்களை நம்புங்கள். இது போன்ற போலிச் செய்திகளைப் பரப்புபவர்கள் உங்களால் முடிந்தால் மக்களுக்கு உதவுங்கள். என்னைப் போலவே பல நடிகர்கள் இதுபோன்ற போலி ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகளால் துயரத்துக்கு ஆளாகின்றனர். இது அவர்களுக்கு ஒரு அன்றாடமாகவே மாறிவிட்டது''.

இவ்வாறு விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x