Published : 01 May 2020 09:03 PM
Last Updated : 01 May 2020 09:03 PM

பெரும் விலை கொடுக்க முன்வந்தும் நிராகரித்த விஜய்

'மாஸ்டர்' படத்துக்கு டிஜிட்டல் நிறுவனம் பெரும் விலை கொடுக்க முன்வந்தும் அதை நிராகரித்துள்ளார் விஜய்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.

இன்னும் 20 நாட்கள் இறுதிக்கட்டப் பணிகள் இருப்பதாகவும், 'மாஸ்டர்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன.

'மாஸ்டர்' படக்குழுவினரிடம் டிஜிட்டல் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்றால், 'மாஸ்டர்' படத்தைக் கைப்பற்ற டிஜிட்டல் நிறுவனம் மிகப்பெரும் தொகையைக் கொடுக்க முன்வந்துள்ளார்கள். இந்த தொகையைக் கேட்டுவிட்டு, உடனடியாக விஜய்யிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார்.

தயாரிப்பாளர் விஜய்யிடம் கேட்டதற்கு, "இதை விடப் பெரிய தொகை கொடுத்தாலும் வேண்டாம். நான் படம் பண்ணுவது என் ரசிகர்களுக்காகத் தான். அவர்கள் திரையரங்கில் கொண்டாடுவதற்காகத் தான்" என்று சொல்லியிருக்கிறார் விஜய். இந்த விஷயத்தை அப்படியே அமேசான் நிறுவனத்திடம் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதனைத் தொடர்ந்தே 'மாஸ்டர்' படத்தின் டிஜிட்டல் வெளியீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x