கரோனா பாதித்தவர்களுக்கு உதவ கிளாப் போர்டை ஏலம் விடும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழு

கரோனா பாதித்தவர்களுக்கு உதவ கிளாப் போர்டை ஏலம் விடும் ஜேம்ஸ் பாண்ட் படக்குழு

Published on

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளிலும் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசியல்வாதிகள், தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்காக உதவும் பொருட்டு ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் ஒரு புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளனர்.

வரவிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டு டை’ படத்தில் பயன்படுத்தப்பட்ட கிளாப் போர்டை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

அந்த கிளாப் போர்டில் ‘நோ டைம் டு டை’ படத்தில் பணிபுரிந்த நவோமி ஹாரிஸ், லியா சீயூடாக்ஸ், லஸானா லின்ச், படத்தின் இயக்குநர் கேரி ஃபோஜி, தீம் பாடலைப் பாடிய பில்லி எல்லீஷ் உள்ளிட்டோரின் கையெழுத்து இடம்பெறும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கிளாப் போர்ட் ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை பிரிட்டன் சுகாதாரத்துறைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக வெளியாகவுள்ள ‘நோ டைம் டு டை’ திரைப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in