Published : 26 Apr 2020 06:48 PM
Last Updated : 26 Apr 2020 06:48 PM

சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவாக கீர்த்தி சுரேஷ்?

சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

தென்னிந்தியத் திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்துதளங்களிலும் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்று இவரது பெயர் 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலுமே சுமார் 25 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். மீதி அனைத்துமே தெலுங்குப் படங்கள்தான். இவரது முதல் கணவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்களுக்கு நரேஷ் என்ற மகன் இருக்கிறார். இவரும் தற்போது நடிகராக வலம் வருகிறார். கிருஷ்ணமூர்த்தியை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் கிருஷ்ணாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் விஜய நிர்மலா.

தமிழ்த் திரையுலகில் 'பணமா பாசமா' படத்தில் இடம்பெற்ற 'இலந்த பழம்.... இலந்த பழம்' பாடலில் நடனமாடியது விஜய நிர்மலாதான். 2019-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி தனது 73-வது வயதில் மறைந்தார்.

தற்போது இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு படமொன்று உருவாகவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனை அவரது மகன் நடிகர் நரேஷ் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் விஜய நிர்மலாவாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், சமீபத்தில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து பெரும் பாராட்டைப் பெற்றதால், விஜய நிர்மலாவாகவும் கீர்த்தியை நடிக்க வைக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்தபோது, "இப்போதைக்கு அவர் பல படங்களுக்குத் தேதிகள் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு யாரும் அவரை அணுகவில்லை. அவ்வாறு அணுகிப் பேச்சுவார்த்தை நடந்தால் பார்க்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x