Published : 26 Apr 2020 03:26 PM
Last Updated : 26 Apr 2020 03:26 PM

தயாரிப்பாளர்களுக்கு உதவக் கடிதம் எழுதிய கே.ராஜன்: உடனடியாக முன்வந்த ரஜினிகாந்த்

தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ரஜினிக்குக் கடிதம் எழுதியுள்ளார் கே.ராஜன். அதற்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரித் தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் எனப் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார். ஆனால், பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கவில்லை. தற்போது இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் என ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனியாக நிவாரணப் பொருட்களை ரஜினி அனுப்பிவைத்து வருகிறார்.

இதனிடையே, தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். அதற்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் கே.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"கொடூரமான கரோனா கிருமிகளின்‌ தாக்குதல்கள்‌ காரணமாக நம்‌ தயாரிப்பாளர்களில்‌ நூற்றுக்கணக்கானோர்‌ பல இன்னல்களுக்கு ஆளாகி, பொருளாதார சிரமத்தில்‌ வீட்டிற்குள்ளேயே வேதனையில்‌ ஆழ்ந்திருக்கிறார்கள்‌. இந்த இக்கட்டான நேரத்தில்‌ தயாரிப்பாளர்களில்‌ சிலர்‌ நல்ல மனதுடன்‌ அரிசி மூட்டைகளும்‌, பணமும்‌ கொடுத்து உதவி செய்துள்ளனர்‌. அவர்களுக்கு நன்றி !

ஒவ்வொரு உறுப்பினரின்‌ குடும்பத்திற்கு இன்னும்‌ இரண்டு மாதங்களுக்கான தேவைகள்‌ அதிகம்‌. ஆகவே மேலும்‌ தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டி ரஜினிகாந்துக்குக்‌ கடிதம்‌ எழுதினேன்‌. பல பேரை வாழ வைத்தவர்கள்‌, கொடுத்துப் பழகியவர்கள்‌ நம்‌ தயாரிப்பாளர்கள்‌. அவர்கள்‌ இன்று பொருளாதார சிரமத்தில்‌ சிக்கி அவதிப்படுகின்றனர்‌. யாரிடமும்‌ உதவி கேட்டுப் பழகாத நம்‌ தயாரிப்பாளர்களுக்கு நல்ல முறையில்‌ உதவி செய்ய வேண்டும்‌ எனக் கேட்டேன்‌.

பல பேருக்கு உதவிக் கரம்‌ நீட்டிய ரஜினி, நம்‌ தயாரிப்பாளர்கள்‌ 750 பேருக்கு உதவி செய்வதாக உறுதி கொடுத்திருக்கிறார். ரஜினியின் நல்ல மனதிற்கு நன்றி தெரிவிப்போம்‌. அநேகமாக 3-5-2020 அன்று நம்‌ உறுப்பினர்களுக்கு நேரமும்‌ இடமும்‌ அறிவிக்கப்படும்‌. நாட்டிலுள்ள நெருக்கடி நிலை கருதி, தமிழக அரசின்‌ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும்‌ வகையில்‌ அனைவரும்‌ ஒரே இடத்தில்‌ கூட்டமாகச் சேராமல்‌ தி.நகர்‌, சாலிகிராமம்‌, வளசரவாக்கம்‌ ஆகிய மூன்று இடங்களில்‌ விநியோகம்‌ செய்யப்படும்‌.

இடமும்‌, நேரமும்‌ பிறகு அறிவிக்கப்படும்‌. உண்மையிலேயே பொருளாதாரச் சிரமத்தில்‌ உள்ள தயாரிப்பாளர்கள்‌ ரஜினியின் தயாள குணத்துடன்‌ செய்யும்‌ உதவியைப் பெற்ற மகிழ்ச்சியுடன்‌ இருக்க வேண்டுகிறேன்‌. சில நாட்களுக்கு வீட்டுக்குள்ளே இருப்போம்‌. கொடிய கரோனாவை நாட்டை விட்டே விரட்டுவோம்‌".

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x