Published : 26 Apr 2020 11:24 AM
Last Updated : 26 Apr 2020 11:24 AM

ஆன்லைனில் வெளியாகிறதா ‘83’ திரைப்படம்? - ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்

நாடு முழுவதும் கடும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. திரையரங்குகள், உணவகங்கள், போக்குவரத்து அனைத்தும் முடங்கியுள்ளன. பல்வேறு நிகழ்வுகள், படப்பிடிப்புகள், ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படங்களை திரையரங்கங்களில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்களை ஆன்லைனில் வெளியிட தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘83’ திரைப்படத்தை ஒரு பெரிய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனம் 143 கோடி ரூபாய்க்கு வாங்கி விட்டதாகவும் விரைவில் ‘83’ படம் ஆன்லைனில் வெளியாகவுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பரவி வந்தது.

இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கமளித்துள்ளது ‘83’ படத்தை தயாரித்துள்ள ரிலையன்ஸ் எண்டெர்ட்யின்மெண்ட் நிறுவனம்.

இதுகுறித்து ரிலையன்ஸ் எண்டெர்ட்யின்மெண்ட் தலைமை அதிகாரி சிபாசிஷ் சர்கார் கூறியிருப்பதாவது:

இந்த தகவல்களில் துளியும் உண்மையில்லை. பெரிய திரை அனுபவத்துக்காகவே ‘83’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு தயாரிப்பாளர்களுக்கோ, இயக்குநருக்கோ இப்படத்தை சிறிய திரைக்குக் கொண்டு செல்லும் எண்ணம் இல்லை. ஒருவேளை 6 மாதங்களுக்குப் பிறகும் இயல்புநிலை திரும்புவதற்கு தாமதமானாலோ, நிலைமை இன்னும் மோசமடைந்தாலோ நாங்கள் அதுகுறித்து யோசிப்போம். ஆனால் திரையரங்கங்கள் அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மனநிலைதான் இப்போது நமக்கு இருக்கவேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1983-ல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்ற கதையைச் சொல்லும் ‘83' திரைப்படத்தில் ரன்வீர் சிங், இந்திய அணியின் அன்றைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x