

ஊரடங்கை மீறியதாக வெளியான செய்திக்கு விக்கி கெளசல் விளக்கம் அளித்துள்ளார்
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை அந்தந்த மாநிலங்கள் எடுத்து வருகின்றன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களுக்கு அபராதம் வசூலித்ததில் மட்டும் கோடிக்கணக்கான தொகை வசூலாகியுள்ளது.
இதனிடையே பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் விக்கி கெளசல் ஊரடங்கை மீறி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின. பாலிவுட் நடிகர் ஊரடங்கை மீறிவிட்டார் என்று பலரும் செய்திகள் வெளியிட்டார்கள்.
இது தொடர்பாக விக்கி கெளசல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் ஊரடங்கை மீறியதால் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வரும் வதந்திகள் அடிப்படையற்றவை. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நான் என் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுபோன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு விக்கி கெளசல் தெரிவித்துள்ளார்.