Published : 22 Apr 2020 08:55 PM
Last Updated : 22 Apr 2020 08:55 PM

'இது வேற ரமணா!' மீமை வைத்து தயாரிப்பாளரைக் கலாய்த்த இயக்குநர் அமுதன்

தனது 'தமிழ்ப் படம்' மீமை வைத்து, படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்தை கிண்டல் செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.

2010-ஆம் ஆண்டு வெளியான 'தமிழ்ப் படம்', தமிழ் சினிமாவின் முதல் ஸ்பூஃப் படம். மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தை ஒய்நாட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் தயாரித்திருந்தார். வெளியான போதே பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு என தமிழ் சினிமா ரசிகர்கள் கல்ட் அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர்.

இன்றைய சமூக ஊடக தலைமுறையிலும், 'தமிழ்ப் படம்' புகழ் தொடர்கிறது. முக்கியமாக 'தமிழ்ப் படம் 2' வெற்றிக்கு சமூக ஊடகங்கள், முதல் பாகத்தைப் பற்றிய நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருந்தது ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அவ்வப்போது 'தமிழ்ப் படம்' முதல் பாகத்திலிருந்து மீம்களை நெட்டிசன்கள் பகிர்வதும் வழக்கமாக உள்ளது.

அப்படி, 'தளபதி' படத்தின் காட்சியை நையாண்டி செய்து எடுக்கப்பட்ட ஒரு காட்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது அடியாள் ரமணா என்பவரைத் தேடி வருவார் மம்மூட்டியைப் போல இருக்கும் கதாபாத்திரம். ஆனால் அவர் முதலில் அணுகும் நபர், விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் வருவதைப் போல வசனம் பேசுவார். இதற்கு உடனிருப்பவர், இது வேற ரமணா என்பார்.

இந்த காட்சி பல ஆயிரம் முறை, பல்வேறு சூழல்களில், மீம் வடிவில் பகிரப்பட்டுள்ளது. அப்படி சமீபத்தில் அரசியல் ரீதியான ஒரு கிண்டலுக்காக இந்த மீமை ஒருவர் பயன்படுத்தியுள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் 'தமிழ்ப் படம்' இயக்குநர் அமுதன், தயாரிப்பாளர் சஷிகாந்தை குறிப்பிட்டு, "இந்த template-க்கு ராயல்டி வாங்கிருந்தாலே நீ இந்நேரத்துக்கு கார் வாங்கிருக்கலாம்" என்று கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

அமுதனின் இந்த ட்வீட்டை பலரும் லைக் செய்து, ரீட்வீட் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x