Published : 22 Apr 2020 02:16 PM
Last Updated : 22 Apr 2020 02:16 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: விஜய் 1.30 கோடி ரூபாய் நிதியுதவி

கரோனா வைரஸ் பாதிப்புக்கு, மொத்தமாக விஜய் 1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். மேலும், பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கும் திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இதில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் மட்டுமே எந்தவொரு நிதியுதவியும் வழங்காமல் இருந்தார். இது பெரும் சர்ச்சையாகவே இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. தற்போது விஜய்யும் தன் தரப்பிலிருந்து நிதியுதவியை அறிவித்துள்ளார்.

1 கோடி 30 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் விஜய். இதில் பி.எம் கேர்ஸ் நிதிக்கு 25 லட்ச ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய், பெப்சிக்கு 25 லட்ச ரூபாய், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய், பாண்டிச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் என அறிவித்துள்ளார் விஜய்.

இவை போக, ஒரு தொகையை தனது நற்பணி மன்றங்களுக்கு அனுப்பிவைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகவும் உதவிகள் செய்ய முடிவு செய்துள்ளார் விஜய். இந்த அறிவிப்பின் மூலம் விஜய் உதவி குறித்து நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x