Published : 22 Apr 2020 12:29 PM
Last Updated : 22 Apr 2020 12:29 PM

'அறிவும் அன்பும்' பாடல் உருவான விதம்: கமல் விளக்கம்

'அறிவும் அன்பும்' பாடல் உருவான விதம் தொடர்பாக கமல் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா தொடர்பான விழிப்புணர்வுக்காக, பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வுக்காக வீடியோக்கள், குறும்படங்கள், பாடல்கள் என வெளியிட்டு வருகிறார்கள். தற்போது கரோனா விழிப்புணர்வுக்காகப் பாடல் ஒன்றை எழுதி, இயக்கியுள்ளார் கமல்ஹாசன்.

திங்க் மியூசிக் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான். 'அறிவும் அன்பும்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் பாடலை மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, யுவன், அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர். இதன் வீடியோ வடிவம் நாளை (ஏப்ரல் 23) காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது.

முதல் முறையாக ஜூம் செயலியின் மூலம் கமல்ஹாசனும், ஜிப்ரானும் இணைந்து இந்தப் பாடலை வெளியிட உள்ளனர். இதர பாடகர்கள் அவர்கள் வீட்டிலேயே இருந்தபடி இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தப் பாடலில் பல இசையமைப்பாளர்களை ஒருங்கிணைத்தது குறித்து கமல் கூறியதாவது:

"இது ஒரு உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்தது. நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத்தினால் அவர் அவர் பாடும் பகுதிகளைத் தனியாகப் படம் பிடித்தனர்.

இப்படி அவர்களாகவே வீட்டிலிருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. உச்சகட்ட தொழில்நுட்பக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொலிகளை எங்களுக்கு அனுப்பி வைக்க அதை நாங்கள் ஒன்றாகத் தொகுத்தோம்.

நான் பாடல் எழுதினேன். ஜிப்ரான் இசையமைத்தார். மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர். இந்தக் கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்கப் பறைசாற்றும்.

கலைஞர்கள் எப்பொழுதும் மக்களிடையே நம்பிக்கையை விதைப்பவர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலைக் கடக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும் என்று உணர்த்தக் கூடியது. தக்கெனப் பிழைக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் இந்தப் பாடல்" .

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான், "கூட்டு முயற்சியால் எடுக்கப்பட்ட இப்பாடல், கண்டிப்பாக இதுபோன்ற கடினமான சூழலை வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. கரோனா தொற்று இருக்கின்ற ஒரு காலத்தில் கூட மனிதர்கள் கூட்டாக நினைத்தால் முயற்சி எடுத்தால் இதுபோன்ற இன்னும் பல வெற்றிகளைப் பெற முடியும் என்கின்ற நம்பிக்கை வருகிறது.

இந்தப் பாடல் இவ்வளவு சிறப்பாக வெளிவந்திருப்பதற்குக் காரணமான அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் நான் ஒரே முறை தொலைபேசியில் அழைத்த உடனேயே ஒப்புக்கொண்டு தங்கள் பங்கினை முடித்துக் கொடுத்தனர். மிக முக்கியமாக கோரஸ் பாடிய பாடகர்கள் என்னுடன் வேலை செய்ய ஒப்புக்கொண்டதற்கும், சிறப்பாகப் பணியாற்றியமைக்கும் அவர்களுக்கு எனது நன்றிகள்

இந்தக் கரோனோ தொற்று முடிந்த பின் வாழவிருக்கும் புதிய உலகில் புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருக்கும் நம் அனைவருக்கும் இந்தப் பாடலை நான் சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இது கண்டிப்பாகப் பிடிக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x