Published : 21 Apr 2020 04:42 PM
Last Updated : 21 Apr 2020 04:42 PM

உங்கள் உயரத்தை இன்னும் உயர்த்திக் கொண்டீர்கள்: விஜயகாந்த் அறிவிப்புக்கு சேரன் பாராட்டு

உங்கள் உயரத்தை இன்னும் உயர்த்திக் கொண்டீர்கள் என்று விஜயகாந்த் அறிவிப்புக்கு சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவர் சைமனின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது வேதனையைப் பதிவிட்டார். கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் ஒரு பகுதியைத் தருவதாக அறிவித்தார். விஜயகாந்தின் இந்த அறிவிப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து, பாராட்டி வருகிறார்கள்.

விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலைப் பாராட்ட.... வாழவேண்டியவரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்".

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

— Cheran (@directorcheran) April 20, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x