பெப்சிக்கு ரூ.5 லட்சம்; 'தலைவி' படக்குழுவுக்கு ரூ.5 லட்சம்: கங்கணா நிதியுதவி

பெப்சிக்கு ரூ.5 லட்சம்; 'தலைவி' படக்குழுவுக்கு ரூ.5 லட்சம்: கங்கணா நிதியுதவி

Published on

பெப்சி தொழிலாளர்களுக்கும், 'தலைவி' படக்குழுவின் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி அளித்துள்ளார் கங்கணா ரணாவத்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்களாக தொடங்கப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் பெப்சி அமைப்புக்கு ரஜினி, கமல், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் சிலர் அரிசியாகவும் அளித்துள்ளனர். இதை வைத்து பெப்சி தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, 'தலைவி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் கங்கணா ரணாவத்தும் பெப்சி அமைப்புக்கு நிதியுதவி அளித்துள்ளார். பெப்சி அமைப்பு 5 லட்ச ரூபாயும், 'தலைவி' படத்தில் பணிபுரிந்த தினசரி தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார்.

விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த் சுவாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in