Published : 21 Apr 2020 11:19 AM
Last Updated : 21 Apr 2020 11:19 AM

விஜயகாந்த் கடவுள்‌ மனசுக்காரர்‌: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்

விஜயகாந்த் கடவுள்‌ மனசுக்காரர் என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவர் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் என பலரும் வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது வேதனையைப் பதிவிட்டு கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தனது கல்லூரியின் ஒரு பகுதியைத் தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து, பாராட்டி வருகிறார்கள்.

விஜயகாந்த் அறிவிப்பு தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சமூகத்திற்காகச் சேவை செய்து தன்‌ உயிரை இழந்த ஒரு மருத்துவரை அடக்கம்‌ செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பெரிய கலவரம்‌ நடந்துள்ளது. நமது சென்னையில்‌ அதுவும்‌ மக்களைக் கரோனாவிடம்‌ இருந்து காப்பாற்றப் போராடிய ஒருவருக்கே இந்த நிலைமை. ஏனெனில், மக்கள்‌ இங்கே யாருக்கு என்ன ஆனால் நமக்கென்ன? நாம் நன்றாக இருந்தால் போதும்‌ என்று சுயநலமாகச் சிந்திக்க ஆரம்பித்து ரொம்ப காலம்‌ ஆகிவிட்டது.

ஆனால் இப்படி ஒரு நிலைமையில்‌ ஒரு அதிசயப் பிறவியாய்‌ ஒருவர்‌, 'என்‌ நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கரோனாவில்‌ இறந்தவர்களை அடக்கம் செய்யுங்கள்' என்று சொல்லி இருக்கிறார். அந்த தங்க மனசுக்குச் சொந்தக்காரர்‌தான்‌ கேப்டன்‌.

சினிமாவில்‌ கஷ்டப்பட்டுப் போராடி அந்த இடத்தை அடைந்தவர்‌ கேப்டன். அவர்‌ வீட்டுக்கு யார்‌ போனாலும்‌ அவர்களைச் சாப்பிடவைத்துதான்‌ அனுப்புவார்‌ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எத்தனையோ பேருக்கு மறைமுகமாகவும்‌ , நேர்முகமாகவும்‌ உதவியிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட இப்போது விஜயகாந்த் உதவுவதாகச் சொல்லியிருக்கும் விஷயம்‌ மிகப்பெரியது. வாழ்வதற்கே உதவாத மக்கள்‌ இருக்கும் இந்த உலகத்தில் இறந்தவர்களை நிம்மதியாகப் போகவிடுங்கள். அதற்கு என்‌ இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேப்டன் சொல்லியிருக்கிறார். அவரை எல்லோரும்‌ குழந்தை மனசுக்காரர்‌ என்று சொல்வார்கள். நான்‌ கடவுள்‌ மனசுக்காரர்‌ என்று சொல்கிறேன்‌. கடவுளும்‌ குழந்தையும்‌ ஒன்றுதானே.

ஏனெனில், எல்லா தெய்வங்களின் ஆலயமும்‌ ... கோயிலும்‌ மூடியிருக்கும்போது யார்‌ உதவினாலும்‌ அவர்கள்‌ கடவுள்‌தானே. நீங்கள் பழைய கேப்டனாக மீண்டு வர வேண்டும்‌. உங்கள் சேவைகள்‌ இன்னும்‌ இந்த நாட்டுக்குத் தேவை".

இவ்வாறு ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x