Published : 22 Aug 2015 05:14 PM
Last Updated : 22 Aug 2015 05:14 PM

கண்ணியமானவையா தமிழ் சினிமா விருதுகள்?

நடிகர், நடிகைகளே மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறார்கள். அவர்களாலேயே விளம்பரதாரர்கள் வருகிறார்கள்; அனுமதிச் சீட்டுகள் நன்றாக விற்பனையாகின்றன.

விருதுகள் எப்போதுமே அழகானவை. உங்களின் பாதுகாப்பின்மையை, பயத்தை சிதறடிக்கச் செய்பவை. 'நீங்கள் செய்வது சரிதான்' என்று தோள் தட்டிக் கொடுப்பவை. உங்களின் பெயரை வெற்றியாளராக உலகுக்குக் உரக்கச் சொல்லும் தருணத்தைத் தருபவை.

விருது அறிவிப்பாளரின் உதடுகள், நமது பெயரை உச்சரிக்கும் என்று நம்பிக்கையுடன் கடவுளை வேண்டிக் கொண்டு, காத்திருக்கும் நிமிடங்களைக் கொடுப்பவை. ஆம், நாம் தமிழ் சினிமா விழாக்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். விருது வழங்கப்படும் வாக்குறுதியைப் பெற்ற பின்னரே, பிரபலங்கள் கலந்து கொள்ளும் விருது விழாக்களைப் பற்றியே பேசுகின்றோம்.

ஒரு நிறுவனம், வெற்றியாளர்களுக்கு வழங்கவிருக்கும் விருதுகளைக் கடைசி நிமிடத்தில், மேடையில் அறிவிக்க இருக்கும் வழக்கமான முறை அல்ல இது. சாதனையாளராக அறிவிக்கப்பட இருக்கும் அந்த தேவ தருணத்தின் பதட்டம், கண்ணீர், சந்தோஷம் என எதுவுமே இதில் இருக்காது. விருது பெறுபவர்களின் பெயர்களை ரகசியமாக வைத்துக் கொள்ளும் முறையைப் பற்றி பிபிசி, ஓர் ஆவணப்படத்தையே எடுத்தது. ஆனால் அத்தகைய படங்கள் நமக்குத் தேவையில்லை.

விளம்பரங்கள் போதும். விருது விழாக்களைக் கொஞ்சம் கவனமாகப் பார்த்தீர்களானால், எந்தவொரு பிரபலத்தின் முகமும், கண்களும், விருதின் மகிழ்வையோ, ஆச்சரியத்தையோ, கண்ணீரையோ பெரிதாக வெளிப்படுத்தாதைக் காணமுடியும். அதில் ஒருவித நிம்மதியை மட்டுமே காண முடிந்திருக்கும்.

பாடகர் ஒருவர் விருது வழங்கும் விழாவுக்குச் செல்லும்போது இதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். "ஆம், நான் விருது பெறுகிறேன் என்று எனக்குத் தெரியும். இல்லையென்றால் நான் எதற்கு அங்கெல்லாம் செல்ல வேண்டும்? இது என்னுடைய நிலைப்பாடு மட்டுமல்ல. இங்குள்ள எல்லாருக்குமே அது தெரியும்"

நீதானே என் பொன்வசந்தம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகை வித்யூலேகா ராமன், சில வருடங்களுக்கு முன்னால், தான் நடிக்க வந்த புதிதில், விருது விழா ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறார்.

"சில பிரபலங்களுடன் ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். ஒவ்வொருவருமே தனக்கான விருதை முன்னரே கேட்டுப் பெற்றுக் கொண்ட பின்னரே, அங்கு வந்திருந்தனர் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எல்லாருமே விருது பெற்றவர்களாக இருக்க, நான் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மட்டுமே இருந்தேன். நாட்கள் செல்லச் செல்லத்தான் எனக்கு எல்லாமே புரிந்தது. பிரபலங்கள் யாரும் அவர்களுக்கு விருது வழங்காமல், நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்ற உண்மையும் தெரிந்தது" என்று கூறினார்.

சமீபத்தில் எடிட்டர் ஒருவரை நேர்காணல் செய்யச் சென்றிருந்தேன். அப்போது அவரின் அறையில் மாட்டப்பட்டிருந்த பிரபல விருது உடைந்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. என்ன நடந்ததென்று அவரிடமே கேட்டேன். நடிகர், நடிகைகளுக்குத் தரப்படும் விருதுகள் மட்டுமே கவனம் பெறும் வேளையில் இது மட்டும் எதற்கு என்ற விரக்தியில், அவர் விருதை எடுத்து வீசியதில், அது உடைந்திருக்கிறது. திரைக்குப் பின்னால் வேலை பார்க்கும் கலைஞர்களின் வேலை புறக்கணிக்கப்படுவதை வலியோடு பகிந்து கொண்டார் அவர்.

விழா ஒருங்கிணைப்பாளர்கள், ஏன் அவர்களைக் கண்டுகொள்வதில்லை என்பது குறித்து மேலும் விரிவாகப் பேசினோம்.

நடிகர், நடிகைகளே மக்கள் கூட்டத்தை ஈர்க்கிறார்கள். அவர்களாலேயே விளம்பரதாரர்கள் வருகிறார்கள்; அனுமதிச் சீட்டுகள் நன்றாக விற்பனையாகின்றன. அவை போக, நடிகர்கள் மேடையிலும் நடிக்கிறார்கள். பாடகர்கள் ஒன்றிரண்டு வரிகளைப் பாடுகிறார்கள். இது பொழுதுபோக்கை இன்னும் அதிகப்படுத்துகிறது. பாவப்பட்ட எடிட்டர்களும் மற்ற கலைஞர்களும் இயக்குநருக்கு நன்றி சொல்வதையும், அமைதியாய்ப் பார்த்துக் கொண்டே இருப்பதையும் தவிர மேடையில் வேறு என்ன செய்துவிடமுடியும்? எப்படி டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப்படுத்த முடியும்?

விருது விழா ஒருங்கிணைப்பாளருக்கும் ஒரு நடிகருக்குமான உரையாடலைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தேன்.

விழா ஒருங்கிணைப்பாளர்: விருது விழாவுக்கு உங்களைக் கூப்பிடுவதில் மிகவும்...

நடிகர்: என்ன விருது?

ஒருங்கிணைப்பாளர்: சிறந்த துணை நடிகர் விருது; அத்தோடு...

நடிகர்: சிறந்த நடிகருக்கான விருது?

ஒருங்கிணைப்பாளர்: அடுத்த வருடம் கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்.

நடிகர்: அடுத்த முறையா? நிச்சயமாகவா... ஓகே, வருகிறேன்.

இதே நடிகர் விருது வாங்கும் நிகழ்வைத் தொலைக்காட்சியில் காண்பிக்கும்போது, நாளை என்ற ஒன்றே இல்லாதது போல, பார்வையாளர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பது போன்ற காட்சிகளும் அதில் இணைக்கப்பட்டிருக்கும். ஏதாவது ஒரு மிடில்கிளாஸ் ரசிகர் ஒருவர், தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளேயே தலையை விட்டு அதைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவரின் கண்கள் அந்நிகழ்ச்சியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த நடிகர் விருது வாங்கும்போது பெருத்த கூச்சலிடுவார். தன் குடும்பத்திடமும், நண்பர்களிடமும் பெருமையாகச் சொல்வார். "நான் அப்போதே சொன்னேன் அல்லவா? இவருக்கு விருது கிடைக்கும் என்பது ஏற்கெனவே எனக்குத் தெரியும்!" என்பார்.

பாவப்பட்ட ரசிகரே, உங்களின் அபிமான நடிகருக்கு விருது கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியும் முன்னரே, அந்த நடிகருக்குத் தெரியும். அதனால்தான் அவர் அந்த இடத்தில் இருக்கிறார்.

தமிழில்:க.சே. ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x