Published : 13 Apr 2020 12:34 PM
Last Updated : 13 Apr 2020 12:34 PM

தேர்தலைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மோடியை பிரதமராக்குங்கள்: கங்கணா சகோதரி ட்வீட்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல் இல்லாமல் மீண்டும் நேரடியாக பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் என நடிகை கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டெல் கூறியுள்ளார்.

நடிகை கங்கணா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி என இருவருமே வெளிப்படையான பாஜக ஆதரவாளர்கள். சர்ச்சைக் கருத்துகளுக்கு பிரபலமானவர் கங்கணா. அதைவிட அதிக சர்ச்சைக் கருத்துகளையும், தானாகச் சென்று சமூக வலைதளங்களில் பிரபலங்களிடம் சண்டை போடுவதிலும் பிரபலமானவர் ரங்கோலி. ட்வீட், பேட்டி என எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருப்பவர். தற்போது இவர் கூறிய கருத்து மீண்டும் இணைய உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரங்கோலி, "நாம் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளோம். கண்டிப்பா மோடிஜி நமது பொருளாதாரத்தை ஒன்றிரண்டு வருடங்களில் மீட்டுவிடுவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நமது தேர்தல்களில் நாம் கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (அதனால்) ஒரு தேசமாக ஒன்றுசேர்ந்து 2024 பொதுத் தேர்தலை நாம் புறக்கணித்து மோடிஜியே அடுத்த ஐந்து வருடங்களும் நமது தேசத்தை வழிநடத்த வைப்போம்.

தேவையில்லாமல் நாம் நிறைய வளங்களை வீணடிப்போம். எப்படியும் முடிவு என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அசாதாரணமான சூழல்களுக்கு அசாதாரணமான முடிவுகள் தேவை. நமது தேசம் ஒன்றுபட்டு அப்படி ஒரு புரட்சிகரமான முடிவை எடுக்கும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எப்போதும் போல எதிர்ப்புகளும், ஆதரவுக் கருத்துகளும் வந்து சக நெட்டிசன்களின் ஊரடங்கு பொழுதைச் சுவாரசியமாக்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x