Published : 13 Apr 2020 12:18 PM
Last Updated : 13 Apr 2020 12:18 PM

‘இந்திய நாடே முதலாளி’ - கரோனா போராளிகளுக்காக எஸ்பிபி பாடிய பாடல்

மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களுக்காக இந்தியாவின் முன்னணிப் பாடகர்கள் பங்குபெற்ற ‘சங்கீத சேது’ என்னும் ஆன்லைன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (11.04.20) அன்று இந்தியப் பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு (இஸ்ரா) நடத்தியது.

இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர், கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், ஆஷா போஸ்லே, ஷங்கர் மகாதேவன், உதித் நாராயணன், பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், சோனு நிகம், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டில் இருந்தபடியே பாடல்களைப் பாடினர். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் சேனலின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பானது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ‘முத்து’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை ‘இந்திய நாடே முதலாளி’ என்று பாடல் வரிகளை மாற்றிப் பாடினார். ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை எழுதிய வைரமுத்துவே இந்தப் பாடலையும் எழுதியுள்ளார். தற்போது இந்தப் பாடல் வைரமுத்துவின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x